2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்க்காவிடின், நீதிமன்றம் நல்வழிப்படுத்தும்’

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 22 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பெற்றவர்கள் பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்க்கத் தவறின், நீதிமன்றம் அவர்களை மறியல்சாலைக்கு அனுப்பி நல்வழிப்படுத்தும்” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆவா குழுவை சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர், யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசினார் என சி.சி.ரி.வி ஆதாரத்தை வைத்து யாழ்ப்பாண பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர்.

குறித்த இளைஞர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்நிலையில், சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் குறித்த இளைஞரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் பிணை விண்ணப்பம் செய்தார். அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் இளைஞர் பிணையில் செல்ல ஆட்சேபனை இல்லை என மன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து, சந்தேகநபர் 50 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும், 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 ஆட்பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

அத்துடன் சந்தேக நபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் கையொப்பம் இட வேண்டும். கடவுச்சீட்டு இருந்தால் அதனை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாட்டு பயண தடை விதிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த கட்டளையை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு பதிவாளருக்கு பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .