2025 மே 19, திங்கட்கிழமை

போலி அடையாள அட்டையைத் தயாரித்த இளைஞனுக்கு விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 30 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர் என போலி அடையாள அட்டையைத் தயாரித்து பணியாற்றி வந்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் காலாவதியான உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர மற்றும் நல்லூர் பொதுச் சகாதார பரிசோதகர்களுக்கு இளைஞன் அறிவித்துள்ளார். எனினும் இளைஞனின் தகவலை ஏற்று பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள் எவரும் சம்பந்தப்பட்ட வியாபார நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த அந்த இளைஞன் பொதுச் சுகாதாரப் பரிசோதர் சேவைக்கான போலி அடையாள அட்டையை தனது பெயரில் தயாரித்து வியாபார நிலையங்களுக்குச் சென்று காலாவதியான மற்றும் சுகாதார சீர்கேடான உணவுப் பண்டங்களை அழித்துள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கை தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்களால் முறைப்பாடு வழங்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணைக்கு பொலிஸார் அழைத்த போதும் அந்த இளைஞன் செல்லவில்லை.

இந்த நிலையில் இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். அதனால் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும் இளைஞன் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணை உத்தரவை நிறைவேற்றிய பொலிஸார், இளைஞனைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (29) செவ்வாய்க்கிழமை ஆஜர்ப்படுத்தினர். சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் மன்றில் முன்னிலையாகவில்லை.

அதனால் சந்தேகநபரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X