2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யுத்தகால தரவுகள் சரியானதாக இல்லை : சி.வி.

George   / 2015 நவம்பர் 27 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யுத்தகாலத்தில் அரசாங்கத்தால், அரச அதிகாரிகள் மூலம் திரட்டப்பட்டு வெளியிடப்பட்ட தரவுகள் பிழையாகவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்;டிக்காட்டினார்.

மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் முதலமைச்சரிடம் கருத்துக்கேட்டபோதே முதலமைச்சர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டினார். 

முதலமைச்சர் தொடர்ந்து கூறுகையில், 'யுத்தத்தால் வடக்கில் 7,235 பெண்களே விதவையாகியுள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களின் தொகையானது அதனைவிட அதிகமாகும். 47 ஆயிரத்து 391 பெண்கள் கணவன் இயற்கை மரணம் ஏய்தியதால் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுகின்றது,

கணவன் இயற்கை மரணம் எய்தினால், நட்டஈடு வழங்கப்படும். போரால் மரணமடைந்தால் நட்டஈடு வழங்கப்படமாட்டாது என பதிவுகள் மேற்கொள்ளும் போது, கூறிய காரணத்தால் போரால் கணவனை இழந்த பல பெண்கள் கணவன் இயற்கை மரணம் எய்தினர் எனப் பதிவு செய்துள்ளனர்.

போரால் வடக்கில் கணவனை இழந்த பெண்களின் தொகை கணக்கீடானது மீளாய்வு செய்யப்படவேண்டும்.

வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்பது தொடர்பில் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார எங்களுடன் பேசினார். அத்துடன், நடவடிக்கைக எடுப்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரச பிரதிநிதியொருவர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு, பலவிதமான பிரச்சினைகளை எடுத்துக்கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என்ற 1994ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நடைமுறை இன்றும் நடைமுறையில் உள்ளது. அதில் அதிகரிப்பு கொண்டு வரப்படவில்லை. ஆனால், அந்த 1 இலட்சம் ரூபாயை வழங்கக்கூட அரசாங்கத்திடம் போதிய பணம் இல்லையென்பதை அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்துக்கு 30 ஆயிரம் மக்களுடைய கோரிக்கைகள் கிடைக்கப்பெற்ற போதும், ஒரு தொகையினருக்கு மாத்திரமே இழப்பீடு வழங்க முடிந்துள்ளது. மிகுதி பேருக்கு கொடுக்க முடியவில்லை என்பதையும், மிகுதி மக்களுக்கான பணத்தை வெளிநாடுகளுடன் கதைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பிரதிநிதி கூறினார்.

மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கையானது தயாரித்து ஆளுநரின் பரிசீலனையுடன் மத்திய அரசாங்கத்துக்கு அனுப்புவோம். ஜனாதிபதி அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பார்.

எம்முடன் கலந்தாலோசித்து எமது மக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் எடுக்கும் தீரமானம் நல்லதொரு தொடக்கம். இதனை அனைத்து விடயங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை' என முதலமைச்சர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .