2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'சந்தேகநபர்கள் மீதான சித்தரிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது'

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில்,  இணையத்தளங்களில் வெளியாகும் தவறான சித்தரிப்புக்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு, செவ்வாய்க்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களின் கருத்துக்களை வெளியிடுவதற்கு, நீதவான் அனுமதி வழங்கினார். இணையத்தளங்களில் தங்களைப் பற்றிய அவதூறான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் இந்த வழக்குடன் தொடர்புடைய 8ஆவது சந்தேகநபர், மன்றில் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த நீதவான், இணையத்தளங்களில் வெளியாகும் தவறான சித்தரிப்புக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் வழக்கை திசை திருப்பும் வகையில் ஏதாவது நடைபெற்றால் மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும், சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் மூக்குக்கண்ணாடி தொடர்பில், குற்றப் புலனாய்வு பொலிஸார் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சந்தேகநபர்களின் டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகளை துரிதப்படுத்தவேண்டும் என்றும், மாணவி சார்பாக நீதிமன்றத்தில்  ஆஜராகியிருந்த சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதவான், விரைந்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு  குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு பணித்தார்.

இதேவேளை, மூன்று சந்தேகநபர்கள் சார்பாக ஆஜராகியிருந்த  தென்னிலங்கை சட்டத்தரணி, நேற்று புதன்கிழமை வழக்கு நடைபெற்ற வழக்குப் பத்திரத்தின் உறுதிப்படுத்திய பிரதியை தருமாறு கோரினார். எனினும் நீதவான் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

இதனையடுத்து, 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி கடந்த வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு மே மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .