2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் உத்தரவை மீறி நியமனம் ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

உற்பத்தி உதவியாளர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்த போதும், 192 பேருக்கான நியமனங்கள் விவசாய திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற சபை அமர்வில், தமிழர்கள் வாழும் வடமாகாணத்தில் விவசாய உற்பத்தி உதவியாளர்களாக அதிகளவான பெருன்பான்மையினத்தவர்கள் நியமனம் செய்யப்படுவது தொடர்பிலான விவாதம்; இடம்பெற்றது.

'வடமாகாண விவசாய உற்பத்தி உதவியாளர் நியமனத்தில் அதிகளவான பெருன்பான்மையினத்தவர்கள் நியமிக்கப்படவுள்ளமை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி செயலகத்தால் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவையில் தெரிவித்தார்.

இதன்போது, கருத்துக்கூறிய வடமாகாண விவசாய அமைச்சர், 'க.பொ.த சாதாரண தரத்தில் 6 சித்திகள் தகுதியுடன் கோரப்பட்ட விவசாய உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்துக்காக வடமாகாணத்தில் 5 ஆயிரத்து 87 பேர் விண்ணப்பத்திருந்தனர்.

வடமாகாணத்தில் 361 பேருக்கு நியமனங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதில் 29 தமிழர்களும் மிகுதிப் பேர் பெருன்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். தமிழர்கள் அதிகம் வாழும், பகுதியில் பெருன்பான்மையினத்தவர்கள் நியமிக்கப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர்கள் இங்கு கடமையாற்றுவது இயலாத காரியம். இது தொடர்பில் முதலமைச்சர் ஜனாதிபதியுடன் கதைத்து, நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தும், கடந்த வாரம் 192 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் 34 தமிழர்களுக்கும் 158 பெருன்பான்மையினத்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதியின் உத்தரவை மீறிய செயல் ஆகும். எமது இளைஞர் யுவதிகள் இங்கு வேலைவாய்;ப்பின்றி இருக்கும் போது, பெருன்பான்மையினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றமையானது, நல்லாட்சிக்கு பங்கம் விளைவிக்கும் செயல் ஆகும். இதற்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்காவிடின் 31ஆம் திகதி முதல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளோம்' என்றார்.

இதேவேளை, 'இந்த நியமனங்களை பிரதேச செயலக ரீதியில் வெட்டுப் புள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு வழங்கப்பட வேண்டும்' என எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் கூறினார்.

'இந்த சிறிய நியமனத்தையே பெற்றுத் தராத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வாறு 1 ½ வருடத்தில் சமஷ்டி முறையிலான தீர்வைப் பெற்றுத்தரப் போகின்றார்கள்' என எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பினார்.

'இவ்வாறான தேவையற்ற பொருத்தப்பாடற்ற கருத்துக்களை தவராசா தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், முன்னைய அரசாங்கத்துடன் ஒன்றாக இருந்த காலத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது' என ஆளுங்கட்சி உறுப்பினர் இமானுவல் ஆனோல்ட் கேள்வி எழுப்பினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .