2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'நிரந்தர நியமனம் வழங்கப்படும்' என கடிதம் வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 10 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

“நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். “விரைவில் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என வடமாகாண சுகாதார அமைச்சு உறுதிக் கடிதத்தை வழங்கவேண்டும் என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களும் தெரிவித்தனர்.

தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி மேற்படி தொண்டர்கள், பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதாரத் திணைக்கள அலுவலகம் முன்பாக இன்று வியாழக்கிழமை (10) இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் காணப்பட்ட தொண்டர்கள் பற்றாக்குறை காரணமாக ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

6 மாதகாலம் ஒப்பந்தம் முடிந்த பின்னர், விரைவில் 700 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது அதில், 34 பேருக்கு முன்னுரிமையளிக்கப்படும் எனக்கூறி, மேலும் 3 மாதங்களுக்கு இவர்களுக்கான ஒப்பந்தத்தை வடமாகாண சுகாதார திணைக்களம் நீடித்தது.

இவர்களுடைய 3 மாத ஒப்பந்தம், கடந்த 2015 ஆம் ஆண்டு டிசெம்பருடன் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பணியில் இருந்து நிற்காமல் தொடர்ந்தும் வேதனமின்றி பணியாற்றி வருகின்றனர்.

வேதனமின்றி பணியாற்ற வேண்டாம், நியமனம் வழங்கப்படும் போது பணிக்கு வருமாறும் வடமாகாண சுகாதார திணைக்களத்தால் கூறப்பட்டுள்ளது.  எனினும், தாங்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டால் தங்களை மறந்துவிடுவார்கள் என்றும், இதனால் தங்களுக்கான நியமனங்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக வேதனமின்றி தொடர்ந்தும் நாளொன்றுக்கு 9 மணித்தியாலங்கள் கடமையாற்றப்போவதாக சுகாதாரத் தொண்டர்களும் தெரிவித்தனர்.  

இவர்கள் புதன்கிழமை (09) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் போது, இவர்களைச் சந்தித்த சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், 700 சுகாதாரத் தொண்டர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்குவது தொடர்பான அறிக்கை மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது, அனுமதி கிடைத்தவுடன் நியமனம் வழங்கப்படும் என்றார்.

இந்நிலையில், நியமனம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை எழுத்து மூலம் தருமாறு கோரி அவர்கள் இன்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X