2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மகனை ஈ.பி.டி.பியினர் கடத்திச் சென்றனர்

Niroshini   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வேலணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக அலுவலகம் திறக்க முற்பட்ட மகனை ஈ.பி.டி.பியினர் கடத்திச் சென்றனர் என தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வுகள், ஞாயிற்றுக்கிழமை (28) வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு சாட்சியளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சதாசிவம் லோகேஸ்வரன் (காணாமற்போகும் போது வயது 36) 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி காணாமற்போனார்.

இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வேலணைப்பகுதியில் அலுவலகம் திறக்க முற்பட்டார்.
அதற்கு ஈ.பி.டி.பியினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ராம் தோழர் என்பவர் எனது மகனை மிரட்டினார். அத்துடன் வீட்டுக்கு வந்து என்னையும் மிரட்டி விட்டுச் சென்றனர். எனினும், மகன் அவற்றை கண்டுகொள்ளாமல் அலுவலகம் திறக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.

இதனையடுத்து, இரவு நேரம் வீட்டுக்கு வந்த ஈ.பி.டி.பியினர் மகனுடன் கதைக்க வேண்டும். தம்முடன் வருமாறு அழைத்தனர். அதற்கு நான் 'இது இரவு நேரம். தற்போது வரமுடியாது, விடிந்ததும் அவர் வருவார்' என தெரிவித்தேன்.

அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே 'எதுவாக இருந்தாலும் வீட்டில் வைத்து கதையுங்கள்' என தெரிவித்தேன்.

அதற்கு அவர்கள் 'பயப்பட வேண்டாம். நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்' என கூறி மகனை முற்றத்துக்கு அழைத்துச் சென்று உரையாடினர். பின்னர் அவர்களை அவ்விடத்தில் காணவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை மகன் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை.

மகன் காணாமற் போனதன் பின்னர் மகளுக்கு அரச உத்தியோகங்களுக்கான கடிதங்கள் வந்தன. எனினும் அரசியல் பழிவாங்கல் காரணமாக அந்த வேலைகள் கிடைக்கவில்லை.

நாங்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என்ற காரணத்தினால் மகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் கூட்டமைப்பால் எமக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X