2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'வீட்டுத் தோட்டத்தை செய்யுங்கள்'

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்திலுள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வீட்டுத் தோட்டங்களை செய்து தங்களுக்குத் தேவையான மரக்கறிகளை தாங்களே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உணவு உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டத்தை வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தும் கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கடந்த வருடம் நான் இரணைமடுவில் சந்தித்த போது, நாட்டில் பயிரிடக்கூடிய ஒவ்வொரு நிலத்தையும் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்த வேண்டும். இதன் மூலம் உணவுப் பொருட்களின் இறக்குமதிகளுக்காக செலவிடப்படும் செலாவணியைக் குறைக்க முடியும் என்றார்.

அவரது கூற்றை நான் வரவேற்றேன். அரசியலுக்கு வர முன்னர் கொழும்பிலுள்ள எனது வீட்டின் மொட்டை மாடியில் மரக்கறித் தோட்டம் செய்தேன். வீட்டுக்குத் தேவையான மரக்கறிகளை அதன் மூலம் பெற்றேன்.

வீட்டில் மரக்கறிகளைச் செய்வதன் மூலம் இரசாயனப் பயன்பாடற்ற உற்பத்திகளைப் பெறமுடியும். வீட்டுத் தோட்டங்களைச் செய்வது தொடர்பில் மக்களுக்கு அதிகாரிகள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

முன்னொரு காலத்தில் தனக்குத் தேவையான 60 சதவீதமான உணவை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உற்பத்தி செய்தது. அந்நிலைமை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், இரசாயனப் பசளைகளைத் தவிர்த்து இயற்கை பசளைகளை பயன்படுத்த வேண்டும். அதற்கான வளங்கள் தொடர்பில் ஆராய வேண்டும். இயற்கை பசளைகளை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு பசளை உற்பத்தி செய்யும் கலன்களை இலவசமாக வழங்க வேண்டும். ஜப்பானில் அடுக்குமாடிகளில் விவசாயம் செய்கின்றனர். வடமாகாணத்தில் விவசாயம் செய்யக்கூடிய காணிகள் நிறையவுள்ளன.

நீரில், பயிர்களில் மற்றும் சூழலில் நச்சுத்தன்மை காணப்படுகின்றது. இதனை நீக்க அதிகாரிகள் மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்கு இயற்கை விவசாயமே சிறந்த வழியாகும்.

திருநெல்வேலி சந்தையில் இராணுவத்தினர் மரக்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வதால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என எனக்குக் கூறினர். இது தொடர்பில் அப்போதைய யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேராவுக்கு நான் தெரிவித்ததையடுத்து, அதனைக் கைவிட்டனர்.

ஆனால், அதற்கு மாற்றீடாக இயக்கச்சிப் பகுதியில் விற்பனை நிலையங்களை அமைத்து பொதி செய்யப்பட்ட மரக்கறிகளை ஏ – 9 வீதியால் சென்று வருபவர்களுக்கு இராணுவத்தினர் விற்பனை செய்தனர். அதிகமானவர்கள் அதனை வாங்கிச் சென்றனர். இவ்வாறு விவசாய உற்பத்திக்களுக்கான சந்தை வாய்ப்புக்களை நாங்கள் அடையாளம் காண வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X