Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜூலை 09 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வட பகுதி மீனவ சமுதாயத்தின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக சக்கோட்டை, பொலிகண்டி பிரதேசங்களில் இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்பு அங்குராப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வட பகுதி கடற்றொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். அவர்களின் வாழ்வியலை மேம்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. எமது கடல் வளங்கள் அழிவடையாமல் பாதுகாப்பதும் கடல் வளங்களை விருத்தி செய்யவேண்டியது எமது கடமையே.
ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் வட கடலில் கடல் அட்டைகள் வளர்ப்பதற்கு ஒரு செயற்திட்டம் ஒன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். அத்தோடு கடல் தாவரங்களை வட கடலில் வள்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். வட கடலின் மீன் வளங்களை பாதுகாப்பதற்கு அவுஸ்திரேலிய நாட்டின் உதவியுடன் தொழில் பண்ணைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன
அங்கு உரையாற்றிய கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன, "ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்க்கமான தீர்மானத்திற்கு அமைய, கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க வேண்டிய நிலையில் கடற்றொழிலாளர்களின் குடும்பங்களையும் வாழ்க்கையும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான கடற்றொழில் அமைப்புக்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகின்றன. அந்த வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இக்கடற்றொழில் அமைப்புகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன" என்றார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"ஜனாதிபதி தலைமையில் இனம், மதம், மொழி பேதங்கள் கடந்து தேசிய கொள்கையை முன்னெடுத்து உழைத்து வருகின்றோம்.
குறிப்பாக கடந்த 30 ஆண்டு காலமாக யுத்ததத்தால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது ஒரு இயல்பான சூழல் தோற்றுவிக்கப்பட்டது.
இருந்த போதிலும், அண்மைக் காலமாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி காரணமாக வடபகுதி மீனவர்களும் இடர்பாடுகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர்ந்த எனைய அரசியல்வாதிகள் ஜனாதிபதி மஹிந்தவுடன் கைகோர்த்து இருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஜனாதிபதி மஹிந்தவுடன் கைகோர்தால் தமிழ் மக்களுக்கு அவர்களது பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வை காணலாம்.
இந்திய மீனவர்கள் ஏன் கைதுசெய்யப்படுகிறார்கள் அவர்கள் சர்வதேச கடல் சட்டங்களை மீறி எமது கடல் எல்லைகளுக்குள் மீன் பிடிப்பதினால் தான். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் அவர்களை அனுப்பிவைக்கின்றோம்" என்றார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு வடபகுதி மக்களது வாழ்வாதாரத்தில் மிகுந்த கரிசனை கொண்டுள்ள அதேவேளை பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் அதேவேளை தொடர்ந்தும் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், 'ஜனாதிபதியின் ஆலோசனையின் படியும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் ஏற்பாட்டிலும் வட மாகாண ஆளுநரின் அழைப்பின் பேரிலும் பல்வேறு கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
தொடர்ந்தும் இவ்வாறான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் எதிர்காலத்திலும் சிறப்பான செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றும் இவ்வாறான மனைப் பொருளாதார வாழ்வாதார எழுச்சித் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வளமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்' என்றார்.
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார், சில்வெஸ்டர் அலன்டியன் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா. யாழ். மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பார் இ.ரவிந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .