2025 ஜூன் 19, வியாழக்கிழமை

200 ஏக்கரில் மூலிகைச் செய்கை மேற்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 ஜூன் 12 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


'200 ஏக்கர் நிலப்பரப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செய்கையை மேற்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன் மூலம் பொதுமக்கள் பயன்பெறக்கூடிய ஏற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்' என்று சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சாலிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

'யாழ். போதனா வைத்தியசாலையில் ஆயுர்வேதப் பிரிவொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நயீனாதீவு பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'இலங்கையில் சித்த மருத்துவ துறையில் ஆறுக்கும் மேற்பட்ட மருத்துவ முறைகள் காணப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு மருத்துவ முறையை அறிமுகப்படுத்த நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்' என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

'யாழில் சித்த மருத்துவத்துறை கல்வி கற்றுவரும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கல்வியை சிறப்பாக தொடர்வதற்கு சிறந்த சித்த வைத்தியசாலைகள் இல்லை என்பது எனக்கு தெரியும். இதனால் பல்கலைக்கழகங்களில் சித்த வைத்திய கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு யாழ் போதான வைத்தியசாலையில் ஆயுர்வேதப் பிரிவொன்றை ஆரம்பித்து  மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்' என்றும் அவர் தெரிவித்தார்.

'எமது மக்கள் போசாக்கான உணவின்றி தொற்றல்லாத நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதனைத் தடுக்கும் பொறுப்பு சுதேச வைத்தியதுறை அமைச்சுக்கு இருக்கின்றது.

இதனால் தான் நாடுபூராகவும் இவ்வாறான போசாக்கு நிலையங்களை உருவாக்கி வருகின்றோம். இந்த விடயத்தினைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி அவர்கள் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் மருத்துவ குணம் நிறை விதைகளை நாட்டி அதன் மூலம் மக்களுக்கு பயன்பெறக்கூடிய ஏற்பாடுகளை செய்துள்ளார்' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

'இன்று பெரும்பாலான விவசாயிகள் அதிக விளைச்சலுக்கு இரசாயன உரவகைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த உரவகைகளைப் பயன்படுத்தாமல் நல்ல விளைச்சலைப் பெறமுடியும். இதற்கு மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .