2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கரைச்சி பிரதேச செயலரின் இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யக்கோரி மகஜர்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

கரைச்சி பிரதேச செயலரின் இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி மகஜரொன்றை கரைச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அரச அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர்கள் கையொப்பமிட்டு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து
நிர்வாக உத்தியோகத்தரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்த காலத்தின்போது, தன்னலம் கருதாது மக்கள் தொண்டைக் குறிக்கோளாகக் கொண்டு கடமையாற்றி நிவாரணக் கிராமங்களுக்கும் சென்று மக்களைப் பார்வையிட்டு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து பெரும் சிரமத்தின் மத்தியில்
உணவின்றி தங்குமிடமின்றி மீள்குடியேற்றம் நடைபெற்றவேளையில் அயராது கடமையாற்றிய உதவி அரச அதிபர் நாட்டில் வழமை நிலை திரும்பிய நேரத்தில் சற்று நிம்மதியாக கடமையாற்றலாம் என்றிருந்த நேரத்தில் அவரது திடீர் இடமாற்றம் அவரை
மட்டுமல்ல ஊழியர்களாகிய எங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீள்குடியேற்றப் பிரச்சினைகள், காணிப்பிரச்சினைகள் மக்களின் அன்றாட பிரச்சினைகள் யாவற்றையும் உற்றுணர்ந்து முடிந்த தீர்வை வழங்கி ஊழியர்களாகிய எங்களுக்கும் எமது கடமைகளை முழுமையாக மேற்கொள்வதற்கு உறுதுணை வழங்கிய எமது
மேலதிகாரியான பிரதேச செயலரின் சேவை எமக்கும் எமது பிரிவு மக்களுக்கும் தொடர்ந்து தேவைப்படுவதாக உணர்கின்றோம். எனவே, தயவுகூர்ந்து தங்களால் எடுக்கப்பட்ட முடிவினை
மீள்பரிசீலனை செய்துதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இம்மகஜரின் பிரதிகள் ஜனாதிபதி, பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் செயலாளர் பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புதன்கிழமை பிரதேச செயலரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கரைச்சி பிரதேசசபைக்குட்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து, கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு பொலிஸ்
இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X