2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி பருத்தித்துறை மக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு மகஜர்

Super User   / 2012 ஜூலை 25 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

பருத்தித்துறை துறைமுக பகுதியை அண்மித்துள்ள பிரதேசத்தில் உள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு பருத்தித்துறை மக்கள் சார்பாக
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு மகஜர் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் பருத்தித்துறை துறைமுக பகுதி உயர் பாதகாப்பு வலயமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், குறித்த பகுதியில் வசித்து வந்த மக்கள் இடம்பெயர்ந்து தற்போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் இந்த மக்கள் குறித்த பகுதியில் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் துரித மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பருத்தித்துறை துறைமுகம் பிரதேசத்தில் ஜே/401 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் வசித்து வந்த மக்கள் நாட்டில் யுத்த அனர்த்தங்கள் இடம்பெற்றமையால் 1996ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்ட போது சொந்த வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதனால், எங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தோம். இன்று வரை அவ்வாறான வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றோம். நாங்களும் எங்கள் பிள்ளைகளும் பல வருடங்களாக சொல்லொன்ணா கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றோம்.

நாட்டில் தற்போது அமைதியும், சமாதானமும் நிலவி வருகின்றன. யுத்த அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு அரசாங்கத்தின் பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாங்களும் எங்கள் சொந்த வீடுகளில் மீளக்குடியேறி மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ விரும்புகிறோம். எங்கள் பிள்ளைகளும் ஏனைய பிள்ளைகளை போல் கல்வி கற்று வாழ்க்கையை வளம்படுத்த வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

பாதிக்கப்பட்டு பெரும் துன்பங்களையும் துயரங்களையும் எதிர்நோக்கி வருகின்றோம் இத்தகைய நிலமையைப் புரிந்துகொண்டு இதற்கான திர்வை நீங்கள் பெற்றுத்தருவீர்கள் என்று நம்புகின்றோம்" என குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  மகஜரின் பிரதிகள் பிரதமர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், யாழ். மாவட்ட செயலாளர் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .