2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு

Kogilavani   / 2012 ஜூலை 28 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ஜே.டானியல்)

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெரும்பாலான கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

யாழ்.நகரத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் 67 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் மனிப்பாய் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 13 ஆயிரம் ரூபா பெறுதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான 20,000 ரூபா பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோன்று கொடிகாமம் பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கச் சங்கிலியின் சிறிய பகுதி மீட்கப்பட்டுள்ளன.

கொடிகாமத்தில் வீடு ஒன்றில் மூன்று இலட்சத்து 42 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாவல்கட்டுப் பகுதியில் 275,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் இந்தச் சம்பவத்தடன் தொடாபுடைய சந்தேக நபர் தொடர்பான தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.

சுன்னாகம் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி  காங்கேசன்துறை வீதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கையடக்கத் தொலைபேசி ஒன்று களவாடப்பட்டுள்ளதுடன் அச்சுவேலி நகரத்தில் உள்ள கடை ஒன்று
உடைக்கப்பட்டு 22 கையடக்கத் தொலைபேசிகள களவாடப்பட்டுள்ளன.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாக வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஒரு வாரகாலத்தில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத மதுபான விற்பனையில் 5 பேரும் கஞ்சா விற்பனை செய்த 4 பேரும் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரும் மதுபானம் அருந்தி விட்டு வாகனம் செலுத்திய 10 சாரதிகளும் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்திய 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மாடுகளை அனுமதியின்றி வெட்டிய 5 பேரும், பொது இடங்களில் மதுபானம் அருந்தி விட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 40 பேரும கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(படங்கள் ஜே.டேனியல்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .