2025 ஜூன் 21, சனிக்கிழமை

லலித், குகன் கடத்தல் பின்னணியில் இராணுவம் உள்ளது: அஜித்குமார எம்.பி நீதிமன்றில் சாட்சியம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 19 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், த.சுமித்தி)


 'லலித் குமார், குகன் ஆகியோர் கடத்தப்பட்டதன் பின்னணியில் இராணுவத்தினரே இருக்கின்றனர்' என முன்னிலை சோஷலிஸ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார, யாழ். நீதவான் நீதிமன்றில் இன்று சாட்சியமளித்தார்.

'இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பேசப்பட்டு வருகின்றது. இருப்பினும் இதுவரையில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இராணுவத்தினரிடமும் புலனாய்வு பிரிவினரிடமும் விசாரணைகள் மேற்கொண்டால் இருவரின் கடத்தல் தொடர்பான விடயங்களை கண்டுபிடிக்க முடியும்' என்றும் அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் க.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னிலை சோஷலிஸ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமாரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கு விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று நீதிமன்றில் சாட்சியமளித்த அஜித் குமார எம்.பி தொடர்ந்து கூறுகையில்,

'யாழ். மாவட்டத்தில் மக்கள் பணி ஒன்றினை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் டிசம்பர் மாதம் மெனிக் பாமில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாக ஆராய சென்றிருந்தோம்.

அங்கு இருவரையும் பார்த்த பின்னர் டிசம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நாம் என்ற அமைப்பினை உருவாக்கும் நோக்கத்துடன் ஊடக மாநாடு நடத்த திட்டமிட்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வர தீர்;மானித்திருந்தோம்.

சம்பவ தினம் லலித், குகன் இருவருக்கும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டவேளை தொலைபேசி அழைப்பு கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்கு வந்த போது இருவரும் கடத்தப்பட்டுவிட்டதாக தகவல் அறிந்து யாழ். பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தோம்.

நீதிமன்றின் கட்டளையின் பிரகாரம் யாழ். பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆர்ப்பாட்டத்தின் போது லலித், குகன் இருவரையும் விடுதலை செய், வடக்கிலும், கிழக்கிலும் நடைபெறும் கடத்தல் கொலைகளை நிறுத்துமாறும் கோஷம் எழுப்பினோம்.

அதேவேளை, ஆர்ப்பாட்டம் முடிவடைந்து தினக்குரல் பத்திரிகை நிறுவனத்திற்கு செல்லும் போது தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தின் முன்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 4பேர் வாகனங்களை தாக்கினார்கள்.

பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யும்போது எம் மீதான தாக்குதலை இராணுவ புலனாய்வு பிரிவினரே மேற்கொண்டனர் என்று தெரிவித்தும் பொலிஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு வரும் வேளையில் 8 இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. ஓமந்தை சோதனைச் சாவடியில் நாம் வந்த வாகனத்தில் தற்கொலை குண்;டுகள் இருப்பதாக கூறி கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

லலித், குகன் கடத்தப்பட்டது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இருவரின் கடத்தல் பின்னணியில் இராணுவத்தினர் இருக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதுவரையில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இராணுவத்தினரிடமும் புலனாய்வு பிரிவினரிடமும் விசாரணைகள் மேற்கொண்டால் இருவரின் கடத்தல் தொடர்பான விடயங்களை கண்டுபிடிக்க முடியும்' என்றார்.

நாளைய தினம், குகனின் மனைவி மற்றும் லலித்தின் தந்தை ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. இந்த வழக்கில் காணாமல் போனவர்கள் சார்பில் வழக்குரைஞர்களான நுவன் போபஹே மற்றும் நிரான் அடேல் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளான அச்சுவேலி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மற்றும் இராணுவத்தின் 512ஆவது படைப்பிரிவின் தளபதி கெப்டன் உபதிஸ்ஸ ஆகியோர் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .