2025 ஜூன் 18, புதன்கிழமை

வலி. வடக்கு மக்களுக்கு நாட்டுக்குள்ளேயே அகதி வாழ்க்கை: சிறிதரன்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 25 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'எங்களின் நாட்டிற்கு அதிகளவான அகதிகளாக இருப்பவர்கள் வலி வடக்கு மக்களே. நாட்டுக்குள்ளேயே இன்னமும் அகதி வாழ்க்கையை வாழ வேண்டிய நிலைமை இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளமையானர் வருந்தற்குரியது' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

வலி. வடக்கு மக்களின் காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிறிதரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, 

'தமிழ் மக்களின் நிலங்களை பறித்து, அந்த நிலத்தில் இருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தி, பரவலாக சிங்கள இராணுவ குடும்பங்களை குடியேற்றி தமிழர்களின் இனப்பரம்பலை கட்டுப்படுத்தி, இனச்சுத்திகரிப்பைச் செய்கின்றார்கள்.

அத்துடன், கலாசார ரீதியாக இனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் இராணுவத்திற்கு இணைக்கப்படுகின்றார்கள். அத்துடன், பெண்கள் மீதான கலாசார சீரழிவினாலும் இனங்கள் அழிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றது. எங்களின் இளைஞர், யுவதிகளின் போக்குகள் மாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றன.

இடங்கள் பறிக்கப்பட்டு வருகின்றதுடன் மொழிகள் ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். இது ஒரு வகையான இனத்தை அழிப்பதற்கான சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆகும்.

இவற்றை எல்லாம் கடந்து, எங்களின் நிலத்திற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம். வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களைத் தவிர, ஏனைய பகுதிகளில் இருக்கின்ற மக்களையும் இணைத்து தொடர்ந்து போராட வேண்டிய நிலை இருக்கின்றது.

இந்த போராட்டத்தை முக்கியமான நிகழ்வாக எடுக்கின்றோம். ஏனென்றால், வலிகாக்ம் வடக்கில் 6500 ஏக்கர் நிலங்களை ஒரே நேரத்தில் எடுப்பதென்பது இங்குள்ள மக்கள் அனைவரின் மனத்திலும் ஒரு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இருக்கின்ற வீடு கூட யாராவது இறங்கி கதைத்தால், திருப்பி எடுக்க ழுடியாது என்கின்ற சூழல் தான் இங்கு காணப்படுகின்றது. அதற்கு எவ்வாறு முகம் கொடுத்து வாழ்வதென்பதும், எங்களின் நிலங்களை மீட்பதென்பதற்காகவும், மண்ணில் நாங்கள் வாழ்வதென்பதற்காகவும், தொடர்ந்து போராடுவோம்.

அதற்கான வழிகளை தேட வேண்டுமென்றும், மாகாண சபை தேர்தல் தொடர்பாக இந்த இடத்தில் கதைப்பது பொருத்தமானதாக இருக்காது. இது அவர்களின் நிலத்திற்கான போராட்டம், இருக்கைக்கான போராட்டம், இந்த விடயம் தொடர்பான அரசியலை இந்த இடத்தில் பேச விரும்பவில்லை. ஆனால், நாங்கள் சில நிர்ப்பந்தங்களுக்கும் சில தவிர்க்க முடியாத நிலமைகளுக்கும் தள்ளப்பட்டு அதற்கான வழிகளை சொல்லிக்கொண்டு இருக்கின்றோமே தவிர வழி என்ன என்பதனையும் தேடிக்கொள்ளாமல் இருக்கின்றோம்.

விவாதங்களை விட்டு, எங்கள் நிலங்களில், எங்கள் மண்ணில் வாழ்வதற்கும் எங்களின் நிலங்களிற்கு செல்ல உணர்வோடு தொடர்ச்சியாக போராட வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .