2025 ஜூன் 18, புதன்கிழமை

தெங்கு உற்பத்தியாளர்களுக்கு மானிய அடிப்படையில் உரம்

A.P.Mathan   / 2013 மே 04 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

நாட்டில் தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தெங்கு உற்பத்தியாளர்களுக்கு மானிய அடிப்படையில் உரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சர் ஏ.பி.ஜெகத் புஸ்பகுமார தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை யாழ். சாவகச்சேரி பிரதேச பிரிவில் உள்ள வரணிப் பகுதியில் நடைபெற்ற “கப்புறுக்க புறவர” திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...

நாட்டில் பெருந்தோட்டப் பயிராக விளங்கும் தெங்குப் பயிர்ச்செய்கையை மேம்படுத்தவேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நாட்டில் விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய உரத்தினை தெங்கு உற்பத்தியாளர்களுக்கு மானிய அடிப்படையில் வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4200 ரூபா உரத்தினை 1200 ரூபாவிற்கு வழங்கவுள்ளதுடன் 3000 ரூபாவினை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் 15 லட்சம் தென்னங்கன்றுகள் நடுகை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் கடந்த 2010ஆம் ஆண்டு 3 லட்சத்தி 310 தென்னங்கன்றுகளும், 2012ஆம் ஆண்டு 12 லட்சத்து 50 ஆயிரம் கன்றுகளும் நடுகை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நாங்கள் நினைத்துப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இருந்தாலும் அந்த நிலை மாறி இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டை அபிவிருத்திப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இலங்கையில் பின் தங்கிய மாவட்டமாக மொனரகலை மாவட்டம் உள்ளது. இங்கு வாழும் மக்கள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கி தங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து வருகின்றார்கள்.

அதேபோன்று இங்குள்ள மக்களும் கிடைத்திருக்கும் இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும். ஒரு செடி நன்றாக படரவேண்டும் என்றால் ஒரு மரத்தின் உதவி கட்டாயம் தேவை. அந்தச் செடியைப் போல நாங்களும் செயற்பட்டு எமது பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றார்.

யுத்தத்திற்குப் பின்னர் வடபகுதியில் தெங்கு உற்பத்திக்கு ஜனாதிபதி முக்கியத்துவம் கொடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இவரின் வழிகாட்டலில் பல திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். நாடுபூராகவும் 3000இற்கும் மேற்பட்ட கப்புறுக்க புறவர சங்கங்கள் அமைக்கப்பட்டு தெங்கு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு தனிப்பட்ட நபருக்கு 5 ஏக்கர் வரை தென்னம் கன்றுகள் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .