2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வட தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்: பிரித்தானியா

Kanagaraj   / 2013 ஜூலை 23 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண சபை தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பு தேவையெனவும்,  கண்காணிப்பு குழுவை  நியமிப்பது தொடர்பாக ஆராய்ந்து அரசாங்கத்திற்கு அறிவுறுத்தவுள்ளதாகவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்ததாக  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சியில் நடந்த இந்த சந்திப்பின் போது  வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக எம்முடன் ஆராய்ந்தனர்.
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடமாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளார். அதுவரையில், வடமாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு அவர் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் நாம் சுட்டிக்காட்டினோம்.

வடமாகாண சபை தேர்தல் நடாத்தக் கூடாது என்று தென்பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடாத்தப்பட்டதுடன், வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தோம்.

அதேவேளை, வடமாகாண சபை தேர்தலை, சுதந்திரமாக நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களத்திற்கு அதிகாரமில்லாமல் இருப்பதாகவும், 18 திருத்தத்தின் மூலம் தேர்தல் திணைக்களத்தின் அதிகாரங்களை ஜனாதிபதி பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளார். அதனால், சுதந்திரமான தேர்தல் நடக்கும் என்பதில் தாம் ஐயம் கொண்டுள்ளதாகவும் எடுத்துரைத்தோம் என்றார்.

தேர்தலில் இராணுவ தலையீடுகள் அதிகரித்துள்ளதாகவும், இராணுவத்தினர் வேட்பாளர்களை தெரிவு செய்வது முதல், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் எடுத்துரைத்தோம்.

இந்நிலையிலேயே வட மாகாண சபைத்தேர்தலை நீதியானதும் நேர்மையானதுமான முறையில் நடத்தவேண்டுமாயின் சர்வதேச கண்காணிப்பு குழு அவசியம் என்றும் பிரித்தானிய நாடாளுமன்ற குழு தம்மிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், சர்வ தேச கண்காணிப்பு குழு அவசியம் என்பதனை தாம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், சர்வதேச கண்காணிப்பு குழுவின் அவசியம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .