2025 ஜூன் 21, சனிக்கிழமை

பென்சில் முனையில் சரியாக புள்ளடியிடுங்கள்: ரெஜினோல்ட்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

"30 வருட யுத்தத்தின் பின்னர் மாகாண சபைக்கு வாக்களிக்கும் உரிமையும், சந்தர்ப்பமும் யாழ். குடாநாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கின்றது" என்று அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

மாதகல் மீனவர் சங்க பொதுமண்டபத்தில ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட மாகாண சபைக்கான வேட்பாளர் அங்கஜன் ராதநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,     

எந்த விதமான பலாத்காரமோ, துன்புறுத்தல்களோ இன்றி, வெடிச்சத்தங்களும், மரண ஓலங்களும் இன்றி, மனச்சாட்சிக்கு ஏற்ப வாக்களிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிட்டியுள்ளது.

கடந்த 30 வருடங்களாக இப்படியானதொரு சூழல் நமக்கெல்லாம் பகல் கனவாகவே இருந்தது. வாக்குகளுக்கு பதிலாக தோட்டாக்களும், தேர்தல்களுக்கு பதிலாக போர்க்களங்களுமே இருந்தன.
இத்தகைய நிலை வடக்கில் நடந்தாலும் தவறு, தெற்கில் நடந்தாலும் தவறு, மொத்தத்தில் 30 வருட போர்க்களமே தவறு.

இன்று 30 வருட யுத்தத்தின் பின்னரான சமாதான காலத்தில் வடக்கில் வசந்தம் வீசத் தொடங்கியுள்ளது.

வெடிச்சத்தங்களுக்குள் பதுங்கியிருந்த உங்கள் இதயத்தின் குரலை இப்போது வெளிப்படுத்துங்கள்.
வெடிச்சத்தங்களினால் முடிவுகளை எடுத்தது போதும். இனி பென்சில் முனையால் சரியாக புள்ளடிகளை சரியானவர்களுக்கு இட்டு தீர்வுகளை எடுங்கள். புள்ளடிகளினால் உரிமைகளை பெற்றுக் கொள்வோம். இன மத பேதமின்றி அனைத்தையும் பெற்றுக் கொள்வோம்
அதற்கான அரியதொரு சந்தர்ப்பம் இப்போது கிட்டியுள்ளது.

இது நம் எல்லோருக்கும் பெரும் பாக்கியம். இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது ஜனநாயகத்தின் வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெடிச்சத்தம் கேட்ட சமூகத்திற்கு, மரண ஓலங்கள் கேட்ட சமூகத்திற்கு, கண்ணீர்கள் சிந்திய சமூகத்திற்கு மறுபடியும் வாழ்ககையில் நம்பிக்கையை ஏற்படுத்த எமது அரசால் முடிந்தது. பாலைவனத்திலும் பயிர் செய்ய எம்மால் முடிந்தது.

கடந்த 30 வருட யுத்தத்தில் வெற்றி பெற்றது பிரபாகரனும் இல்லை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இல்லை. வெற்றி பெற்றது சிங்களவர்களும் இல்லை, தமிழர்களும் இல்லை, போரின் வெற்றி வடக்குக்கும் இ;ல்லை தெற்குக்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தம் எமக்கெல்லாம் பெற்றுத்தந்தது மரணங்களையும், வேதனைகளையும், அனாதைகளையும், கண்ணீர்களையும் மட்டுமேயாகும்.

மக்கள் இல்லாத பாழடைந்த கிராமங்களையும், இடிபாடுகளுடன் கூடிய வீடுகள், சின்னாபின்னமாகிய குடும்பங்கள் மட்டுமே எமக்கு மிஞ்சின.

இப்போது யுத்தம் முடிந்து விட்டது. கடந்த கால வலிகளை மறந்து விடுவோம். புதிய இலங்கையை கட்டியெழுப்புவோம். யுத்தத்தால் இழந்த உயிர்களை தவிர ஏனைய அனைத்தையும் பெற்றெடுப்போம்.

யுத்தத்திற்கு முன்பு இருந்ததை விட சிறந்ததொரு அபிவிருத்தியை ஏற்படுத்துவோம். யுத்த நிறைவுக்கு பின்னரான இந்த நான்கு வருடங்களில் வீடுகள், பாடசாலைகள், வீதிகள், உட்கட்டுமானங்கள், புத்துயிர் பெற்றிருக்கின்றன. கைத்தொழில் பேட்டைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன, தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன, மின்சார வசதி கிராமங்கள் தோறும் வந்து விட்டது. இவற்றை யாரும் மறுக்க முடியாது.

கடந்த 30 வருட யுத்தத்தினால் இளைஞர்கள், யுவதிகள், குழந்தைகள் என பெறுமதிவாய்ந்த உயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். கணவனை இழந்த மனைவிமார், பிள்ளைகளை இழந்த பெற்றோர், உடன் பிறப்புகளை இழந்த சகோதர சகோதரிகள், என தினம் தினம் நிறைய சம்பவங்கள் நடந்து கொண்டே இருந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் நின்று விட்டன.

இப்போது ஏனைய நாடுகளுக்கேற்ப எமது நாட்டையும் மிக வேகமாக கட்டியெழுப்ப வேண்டும். இளைஞர்களின் கனவை நனவாக்க வேண்டும். கல்வி மேம்பாடு, தொழில் வாய்ப்பு, என அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இவற்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணி அரசாங்கத்தினால் சாதிக்க முடியும். அதனால் நீங்கள் அவரோடு இணைந்து அவருடைய கைகளை பலப்படுத்துங்கள் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .