2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடக்கில் ஹத்துருசிங்க சிந்தனையே உள்ளது: சி.வி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாணத்தில் மஹிந்த சிந்தனையல்ல, மஹிந்த ஹத்துருசிங்கவின் சிந்தனையே நடைமுறையில் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொக்குவில் பகுதியில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், எதுவாக இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ எமது நாட்டின் ஜனாதிபதி. அவரை மீறி அவரது சேவகர் வாய் திறப்பது முட்டாள்தனமானது. ஆயுதம் ஏந்தினால் எவரையும் அடக்கி வைக்கலாம் என்றும் அவர்களை முட்டாள்களாக்கலாமென்பதும் அரச சேவகர் நினைக்கக் கூடாது.

இதிலிருந்து நாம் ஒன்றைப் படிக்கின்றோம். இராணுவத்தை கட்டுப் பாட்டிற்குள் வைக்க வேண்டும். வரம்பு மீறினால், அதற்கு பாதிப்பு ஏற்படும். அதனால், அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் பாரிய விளைவுகள் ஏற்படும் என்று அவர் கூறினார்.

வடபகுதியில் உண்மையான விசாரணை மேற்கொண்டால், இராணுவம் மக்களின் இயல்பு வாழ்க்கையினை எந்தளவிற்கு பாழாக்கி வருகிறது என்பது தெரியவரும். இராணுவத்தினரை கட்டுப் பாட்டிற்குள் வைப்பதற்கு, அதற்கு எமக்கு பலம் இருக்க வேண்டும்.

அதுதான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளை கேட்கின்றோம் கிடைத்து விட்டால், இராணுவத்தினரை அடக்க முடியுமென்றும், வடமாகாண சபை தேர்தலில் இராணுவத்தினர் அரச வெற்றிக்காக பாடுபடுகின்றார்கள் என்றும் சுட்டிக் காட்டிய அவர் இவ்வாறான செயற்பாடுகளினால் சட்டத்தினை மீறுகின்றார்கள் என்றும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தினர் எமது சிவில் வாழ்க்கை முறைக்குள் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், சர்வதேசத்தினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதை சர்வதேசத்திற்கு கூறி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், இவை எல்லாம், 21 ஆம் திகதி நீங்கள் தரும் வாக்கில் தான் அடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறி பாராமுகமாக இருந்து விட்டாதீர்கள் இது எமக்கு வெற்றியைத் தராது.ஒவ்வொருவரும் அன்று போய் வாக்களிக்க வேண்டும். அதில் விஷேடமாக பெண்கள் வாக்களிக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஆண்களிலும் பார்க்க கூடிய மதிப்பீட்டில் இருப்பவர்கள் பெண்கள். இந்த நிலையில். பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருக்கும் பொழுது, பெண்கள் கட்டாயமாக சென்று வாக்களிக்க வேண்டும். அதேநேரம், வயது போனவர்கள் மற்றும், வலது குறைந்தோரையும் அழைத்துச் சென்று வாக்களிக்க வைக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .