2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தமிழர்களின் நிலையை சர்வதேசத்துக்கு பறைசாற்றும் வகையில் வாக்களிக்கவும்: பிரசன்னா

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'வடமாகாண சபைத் தேர்தலில் எமது தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக தமிழரின் தேசிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பை அமோக வெற்றியடையச் செய்து தமிழ் இனத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொள்ள தந்தை செல்வாவின் அஹிம்சை வழி அரசியல் காலம் தொடங்கி ஆயுதப் போராட்டக் காலம் வரையும் தமிழ் இனத்தின் பிரச்சினைகளுக்கு இந்த நாட்டில் மாறி மாறி வந்த சிங்களப் பேரினவாத அரசுகளால் இதுவரையும் ஓர் நீதியான தீர்வு வழங்கப்பட்டவில்லை.

இதனால் ஆயிரக் கணக்கான உறவுகளை இழந்து, பொருளாதாரத்தையும் இழந்து, சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து நாம் அகதிகளாக்கப்பட்டோம்.  இதனை உணர்ந்துகொண்ட சர்வதேச நாடுகள், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை விரைவாக வழங்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன.

ஆனால், இலங்கை அரசானது போர் ஓய்ந்து நான்கு வருடங்களாகியும் தமிழரின் முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சனைக்கு இதுவரை எந்த விதமான ஓர் மாற்று தீர்வையும் வழங்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக நவநீதம்பிள்ளையின் பத்திரிகை ஊடகங்களின் அறிக்கையினை அரசு முற்றாக நிராகரித்தது மட்டுமல்லாமல் நவநீதம்பிள்ளை புலிகளின் சார்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சார்பாகவும் பேசுகிறார் என அரசின் அமைச்சர்களும் பேரினவாதம் பேசும் சில கட்சிகளின் தலைவர்களும் பத்திரிகை ஊடகங்கள் மூலம் பேசி வருவதையும் காணக்கூடியதாவுள்ளது.

நவநீதம்பிள்ளையின் கூற்றுக்கு எதிரான அறிக்கைகளையும் வெளிப்படுத்தி வருவதையும் எமது தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இனவாத்தை தூண்டுவதாகவும், நாட்டை கூறுபோடும் உபாயம் எனவும் அரசும், ஏனைய சிங்கள பேரினவாத கட்சிகளும் கூக்குரலிடுகின்றனர்.

எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவை கைது செய்து சிறையிலிட வேண்டும் எனவும், இந்த நாடு முழுவதும் சிங்களவருக்கே சொந்தமானது என்றும் கூறுகின்றனர். இன்று இனவாதம் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பே வடக்கு மக்களிடம் அபிவிருத்தி எனும் மாயக்கண்ணாடியை காட்டி வட மாகாண சபையின் ஆட்சியை அமைக்க தமது வெற்றிலைக்கு புள்ளடி போடுமாறு சர்வாதிகாரப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது.

இதனை வடமாகாண மக்கள் நன்கு அறிந்தும், புரிந்தும், தெளிவோடும் இருப்பதுடன், தங்கள் விலை மதிப்பில்லா வாக்குரிமையை யாருக்கு வழங்க வேண்டும், எவருக்கு புத்தி புகட்ட வேண்டும் என்றும் தெளிவடைந்துள்ளார்கள். இத்தேர்தலை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளுக்கு தமிழினத்தின் ஏகோபித நிலைப்பாட்டை வெளிக்காட்ட எந்த அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் இப்பொழுதே தீர்மானித்து விட்டார்கள்.

மானமுள்ள எம் தமிழினம் தமிழ் தேசியத்தின் வெற்றிக்கே அமோக ஆதரவு வழங்கி வெற்றியடையச் செய்வார்கள் என மீண்டும் கூறுகின்றேன். ஜனநாயகத்திற்கு புள்ளடியும், சர்வாதிகார இராணுவ அடக்கு முறை ஆட்சிக்கு பொல்லடியும் வழங்குவார்கள் என்பதை உறுதியாகச் கூறுகின்றேன்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .