2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபைக்கான செங்கோல் தயாரிப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன், எஸ்.கே.பிரசாத்

வட மாகாண சபைக்கான செங்கோல் தயாரிக்கப்பட்டு வருவதாக சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று (10) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது உரையாற்றிய அவைத் தலைவர், 'வட மாகாண சபைக்கான செங்கோல் அமைப்பதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் செங்கோலுடன் வடமாகாண சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

செங்கோல் அமைப்பதற்கான குழுவின் தலைவராக கந்தையா சிவஞானம், ஆலோசகர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா ஆகியோரும் வடிவமைப்பு உதவியாளர்களாக யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களான பொ.கிருஷ்ணன், செல்வி. ஸ்ரீதேவி, ச.சதானந்தன், ம.மனோகரன் ஆகியோரும் மேற்பார்வையாளராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானத்தினால் சபையின் நடைமுறைகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட விடயங்கள்.

வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்கின்ற உறுப்பினர்களுக்கான ஒரு அமர்விற்குரிய கொடுப்பனவாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து வரும் உறுப்பினர்களுக்கு 7,000 ரூபாவும் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்களுக்கு 3,000 ரூபாவும் யாழ்.மாவட்ட உறுப்பினர்களுக்கு 1000 ரூபாவும் வழங்கப்படும் என தெரிவித்தார். முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவாக வடமாகாண சபையினால் மாதாந்தம் 3000 ரூபா வழங்கப்படவுள்ளது.

வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சர்களுடனும் இரண்டு முகாமைத்துவ உதவியாளரும் ஒரு அபிவிருத்தி பணியாளரும் இணைந்து பணியாற்றுவார்கள். வடமாகாண ஆளுநரின் அனுமதியுடன் வடமாகாண ஆசிரியர்களுக்கு மேலதிக உதவி தொகையாக மாதாந்தம் 4000 ரூபா வழங்கப்படவுள்ளது.

மேலும் வடமாகாண அமர்வின் போது 1987ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்ட மூலத்தின் படி ஜனாதிபதியோ ஆளுநர்களையோ நாடாளுமன்ற உறுப்பினர்களையோ மாகாண சபை அமர்வின் போது விமர்சிக்க முடியாது. ஆனால் நாம் தற்போது விவாதிப்பது படைகளிலிருந்து ஒய்வு பெற்ற ஒருவர் ஆளுநராக இருக்கும் பட்சத்தில் மக்களின் பிரச்சனைகளை மனித நேயத்துடன் பார்ப்பது கடினமாகவுள்ளது.

இது எதிர்காலத்திலும் நீடிக்கக் கூடாது என்பதற்காகவே இங்கு இதுதொடர்பாக கதைக்கின்றோம். ஆகவே சிவில் சமூகத்தைச் சேர்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுள்ள ஒருவரே வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென என்பதே இங்கு நாம் கூறப்படுகின்ற விடயமாகும்.

அத்துடன், வடமாகாண சபைக்குரிய சட்ட வரையறைகளும் நடைமுறைகளும் தொடர்பான கோவை ஒன்றை எனது தலைமையில் நடைமுறைப்படுத்துவதற்கான குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கான ஆலோசகர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சஜந்தன், அன்ரனி சூசை இரத்தினம் பிறிமஸ்சிறைவா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .