2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கணவர் பாதுகாப்பாக இருக்கிறார் என நம்புகிறேன்: யோகியின் மனைவி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 16 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


வட்டுவாகலில் வைத்து 2009 மே மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு 50 பேருடன் கொண்டு செல்லப்பட்ட எனது கணவர் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றார் என்று நம்புவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவராகவிருந்த யோகரட்ணம் யோகியின் மனைவி யோகி ஜெயவதி நேற்று (16) சாட்சியமளித்தார்.

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் தோன்றி சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர், '2009 மே 17ஆம் திகதி வட்டுவாகலில் நானும் எனது கணவர் மற்றும் பிள்ளைகளுமாக இராணுவத்தினர் இருந்த பக்கம் வந்தோம்.

இதன்போது இராணுவத்தினர் உங்களில் யாராவது விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இருந்தால் வந்து சரணடையுங்கள். இதுவரையிலும் எங்களிடம் 11,886 பேர் சரணடைந்துள்ளனர். நீங்கள் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் அறிவித்தனர்.

அதற்கிணங்க எனது கணவர் சென்று சரணடைந்தார். அவருடன் மேலும் 50இற்கும் மேற்பட்டவர்கள் சென்று சரணடைந்தனர். அவர்களுடன் துணையாக பாதிரியார் ஒருவரும் கூடச் சென்றார். இதன்போது அவர்கள் அனைவரது பெயர்களும் பதியப்பட்டு அவர்களை பேரூந்து ஒன்றில் ஏற்றி ஓமந்தை கொண்டு செல்லப்படுவதினை நான் கண்டேன்' என்று ஜெயவதி குறிப்பிட்டார்.
 
அன்று முதல் இன்று வரை எனது கணவர் பற்றிய தகவல் எனக்குக் கிடைக்கவில்லை. அத்துடன் 2010ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையிலும் நான் சாட்சியமளித்திருந்தேன். இருந்தும் என் கணவர் திரும்பி வரவில்லை. அவர் பாதுகாப்பாக இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் இருக்கின்றது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .