2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிளிநொச்சி விவகாரம்; தாயும் மகளும் கைது

Kanagaraj   / 2014 மார்ச் 14 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

கிளிநொச்சி தர்மபுரத்தில் முசிலம்பிட்டி இந்தியவீட்டுத் திட்டப்பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினையடுத்து கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரி (50), மற்றும் அவரது மகள் பாலேந்திரன் விபூசிகா (13) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்விருவரின் மருத்துவ அறிக்கையை பெற்று அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரி எட்மன் மகேந்திரா தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

குறித்த இருவரையும் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அறிவதற்காக நானும், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்றிருந்தோம். அவ்வேளையிலே பொறுப்பதிகாரி இவ்வாறு தெரிவித்ததாக சரவணபவன் தெரிவித்தார்.

இது குறித்து சரவணபவன் மேலும் தெரிவித்ததாவது,

'மேற்படி வீட்டிலிருந்து வந்த நபர் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதனால் பொலிஸார் ஒருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து மேற்படி வீட்டிலிருந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தாயாருக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில் தாயாருடன் மகளை வைத்திருக்க முடியாத சூழ்நிலையில், தாயாரையும் மகளினையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி தொடர்ந்து மகளினை எங்கு சேர்ப்பது என்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவினை நாடவுள்ளதாகப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்ததாக சரவணபவன் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த தாயும் மகளும் தற்போது எங்கே இருக்கின்றார்கள் எனக் நாங்கள் கேட்டபோது,

கிளிநொச்சியில் சட்ட வைத்தியதிகாரி இல்லாமையினால் வவுனியா சட்ட வைத்தியதிகாரியிடம் மருத்துவ அறிக்கையினைப் பெறுவதற்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும், மருத்துவ அறிக்கை பெற்றவுடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகப் பொறுப்பதிகாரி எங்களுக்குத் தெரிவித்தார் என சரவணபவன் மேலும் தெரிவித்தார்.

பாலேந்திரன் ஜெயகுமாரியின் மூத்த மகன் இறுதி யுத்தத்தில் காணாமற்போயிருந்த நிலையில், காணாமற்போனோர் தொடர்பில் யாழில் நடைபெற்ற பல ஆர்ப்பாட்டங்களில் இந்த இருவரும் கலந்துகொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .