2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாணத்தில் நடந்த ஊழல்களையும் விசாரிக்க வேண்டும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

Sudharshini   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

கொழும்பில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் பேசுபவர்கள், வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
சிறுப்பிட்டி வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

எந்த அரசியல் வாதிகளின் தலைமையின் கீழ் வேலை பெற்றிருந்தாலும், அரசாங்க உத்தியோகத்தர்கள் என்றும் மக்கள் சேவகர்களாகத்தான் இருக்க வேண்டும். மக்களுக்கு கடமையுடையவர்கள் அரசாங்கம் சொல்பவற்றை செய்ய வேண்டியவர்கள்.  

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஒரு கட்சிக்கு வேலை செய்பவர்கள் அல்லர். ஆனாலும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நாளாந்தம் கட்சிகளுக்காக வேலை செய்வதனை நான் பார்த்திருக்கின்றேன். அதனை விடுத்து மக்களுக்கு சேவையாற்ற முயலுங்கள். யார் இந்த பதவியை உங்களுக்கு தந்திருந்தாலும் மக்களின் வரிப்பணத்திலேயே உங்களுக்கு சம்பளம் தரப்படுகின்றது.

எனவே, அந்த வரிப்பணத்திற்கு நீங்கள் துரோகம் செய்வதென்பது தமிழ் மக்களிற்கு செய்யும் துரோகமாகும்.; ஊழல் தொடர்பான செய்திகள் நாளாந்தம் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாய ராஜபக்| ஆகியோர் மீது ஊழல் தொடர்பில் பேசப்படுகின்றது.

ஆனால், வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல்கள் தொடர்பில் யார் பேசுவது? இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக ஒருவர் இருந்தார.; அவர் மேல் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இலங்கையில் பன்னிரண்டு போக்குவரத்து பிராந்தியங்கள் உள்ளன. அவற்றின் தலைவர்கள் அனைவரும் மாற்றப்பட்டு விட்டனர். ஆனால் வடபிராந்திய தலைவரை மட்டும் மாற்ற முடியவில்லை.

யாழில் பல இடங்களில் பல விதத்தில் கடந்த காலங்களில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை சீர் செய்ய வேண்டும். உங்களின் நிர்வாகங்களில் இவ்வாறான ஊழல்கள் இடம்பெறக்கூடாது. நாங்கள் நல்லாட்சியை கொழும்பில் எவ்வாறு எதிர்பார்கின்றோமோ? வடக்கு மாகாணத்தில் எவ்வாறு வடக்கு மாகாண சபையிடம் நல்லாட்சியை எதிர்பார்கின்றோமோ அவற்றோடு வினைத்திறன் மிக்கதான அரசாட்சியையும் எதிர் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .