2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பல்கலைகழக மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரியும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், நேற்று திங்கட்கிழமை வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர்.

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டம், நேற்று திங்கட்கிழமை (27) முதல் நாளை புதன்கிழமை (29) வரை முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை இரவு சுதுமலை சந்திக்கு அருகிலுள்ள செல்லமுத்து மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வு ஒன்றில் பல்கலைகழக மாணவர்கள் மீது இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான ந.முரளிதரன் (வயது 23) மற்றும் க.ரஜீவன் (வயது 23) முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மாணவனான எஸ்.ஜெபர்சன் (வயது 23) ஆகிய மூன்று மாணவர்களே படுகாயமடைந்தனர்.

அதில் ந.முரளிதரன் எனும் மாணவனின் வலது கை, வாள் வெட்டில் மணிக்கட்டுடன் துண்டானது.  அம்மாணவனின் துண்டாடப்பட்ட கையினை பொருத்துவதற்கான கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் எஸ்.ஜெபர்சன் எனும் மாணவனுக்கு உடல் முழுவதும் பாரிய வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றது.

மாணவர்கள் மீது மேற்கொள்ளபட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்தும் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யுமாறும் கோரியே இன்றையதினம் மாணவர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அத்துடன் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு பல்கலைகழகத்துக்கு அருகில் வாடகை வீட்டில் இருந்த இரு பல்கலைகழக மாணவர்கள் உட்பட நால்வர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

அன்றைய தினம் கைது செய்யப்பட்ட மாணவர்களையும் விடுவிக்குமாறும் போராட்டத்தின் போது கோரி இருந்தனர். அதேவேளை இன்றைய தினம் குறித்த மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .