2025 ஜூலை 03, வியாழக்கிழமை

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் பதவியேற்றார்

Menaka Mookandi   / 2015 ஜூன் 01 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதியரசர் கே.ஸ்ரீபவனால் நியமிக்கப்பட்ட, மாணிக்கவாசகம் இளஞ்செழியன் இன்று திங்கட்கிழமை (01), தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில், நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.  

யாழ்ப்பாணம், சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி வழக்கில், யாழ்ப்பாணத்தில் விசேட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1999ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இவர் கடமையாற்றியிருந்தார்.

அதன் பின்னர் 3 வருடங்கள் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் பின்னர் 2008ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் நீதிபதி இளஞ்செழியன் கடமையாற்றியிருந்தார்.

அதனையடுத்து 2008ஆம் ஆண்டு அவர் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டார். திருகோணமலையில் 2008 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் கடமையாற்றிய அவர், பின்னர் கல்முனைக்கு மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் பெற்றிருந்தார்.

கல்முனை மாவட்ட நீதிபதியாக 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையில் கடமையாற்றிய பின்னர், 2012ஆம் ஆண்டு அவர் மீண்டும் திருகோணமலை மேல்நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டு அங்கு 2014ஆம் ஆண்டு வரை மேல்நீதிமன்ற ஆணையாளராகக் கடமையாற்றினார்.

அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, தற்போது யாழ். மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .