2025 ஜூன் 28, சனிக்கிழமை

'மீள்குடியேற்ற காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்'

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் கையகப்படுத்தி வைத்துள்ள 90 வீதமான நிலங்களும் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் ஆகும். மிகமிக சொற்பமான காணிகள் தான் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகள் என என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழிலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

'10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியேற வேண்டியிருக்கின்றது. வலிகாமம் வடக்கு மாத்திரமல்ல, வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என பல்வேறுபட்ட இடங்களில் இராணுவம் நூற்றுக்கணக்கான ஏக்கர்களை கையகப்படுத்தி பயிற்சி முகாம்கள், இராணுவ உயர் அதிகாரிகள் தங்குமிடங்கள் இராணுவ படை தலைமையகங்கள் போன்றவற்றை அமைத்துள்ளார்கள்.

மக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தை அப்புறப்படுத்தினாலேயே மீள்குடியேற்றம் செய்ய முடியும். இது தொடர்பில் அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். தற்போது மீன்குடியேற்றம் என்பது இராணுவம் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் கூறுகின்றார். தமிழ் மக்களின் குடியேற்றத்தை தீர்மானிக்க இராணுவம் யார்? இராணுவத்துக்கும் மீள்குடியேற்றத்துக்கும் என்ன தொடர்பு?

அப்படியாயின் எதிர்காலத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துடன் பேசாது இராணுவத்துடன் பேச வேண்டுமா? அராசங்கம் என்ன செய்கின்றது? போன்ற பல்வேறுபட்ட கேள்விகள் எழுகின்றன.

தமது ஆட்சி காலத்தில் எந்த இராணுவ முகாமையும் மூடவில்லை முன்னர் இருந்த மஹிந்த ஆட்சியில் தான் மூடப்பட்டது என்ற கருத்தை சிங்கள மக்கள் மத்தியிலும் கொண்டு செல்கின்றனர். இவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மிகுதியாகவுள்ள மக்களை மீள் குடியேற்றுவார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இராணுவம் தான் மீள்குடியேற்றத்தை பற்றி தீர்மானிக்க வேண்டும் என கூறினால் நாம் அரசாங்கத்துடன் பேச வேண்டிய நிலை ஏற்படாது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்டால் தான் மீள்குடியேற்றம் சாத்தியப்படும். சிவில் பிரச்சனைகளை கையாளுவதற்கும் உடனடியாக இராணுவத்தை அழைப்பதும், இராணுவ புலனாய்வு பிரிவினர் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை முடக்கும் வேலைகளையும் செய்கின்றார்கள். வடக்கு கிழக்கில் சுமூகநிலை, அடிப்படை சுதந்திரம் என்பன பேணப்பட வேண்டும் என்றால் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் முற்றுமுழுதாக வெளியேற வேண்டும்

மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மீளவும் போராட்டங்களை முன்னெடுக்க தூண்டுகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற போராட்டத்தை விட பாரிய அளவிலான போராட்டங்களாக முன்னெடுக்கப்படும். மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் ஆயின் போராட்டங்களை முன்னெடுப்பதை தவிர மாற்று வழியில்லை என்பது தான் இன்று உள்ள சூழ்நிலை என நான் கருதுகிறேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .