2025 ஜூன் 28, சனிக்கிழமை

கோமகன் வவுனியா நீதவான் நீதிமன்ற வழக்கிலிருந்து விடுதலை

Sudharshini   / 2015 ஜூன் 27 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நேசமணி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு மற்றும் வவுனியா நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் மகஸீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன் வவுனியா நீதவான் நீதிமன்ற வழக்கிலிருந்து வெள்ளிக்கிழமை (26) விடுதலை செய்யப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமிருந்த யாழ். மாநகர சபையின் உறுப்பினராக இருந்த கோமகன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

2002, 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பில் ஆயுதப் பயிற்சி பெற்றார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக குறித்த நபர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றம், வவுனியா நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம் 6 ஆம் திகதி குறித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்க முடியாது என்று நிராகரித்த வவுனியா நீதவான் நீதிமன்ற நீதவான் அ.பிரேம்சங்கர், அது தொடர்பான மேலதிக தகவல்களுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அ.பிரேம்சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தொடர்ந்து விசாரணையை நடத்துவதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்று தெரிவித்த நீதவான் சந்தேக நபரை விடுதலை செய்தார்.

இதேவேளை, மேற்படி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றில் இவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் இவர் தொடர்ந்தும் மகஸீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .