2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'கல்விச்சமூகத்தின் வெற்றிக்கு அதிபர்களின் பங்களிப்பு முக்கியமானது.'

George   / 2015 ஜூலை 06 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

'கல்விச்சமூகத்தின் வெற்றியில் பாடசாலை அதிபர்களின் பங்களிப்பு காத்திரமானது. அதிபர்களின் நிர்வாகத்திறனிலும் அர்ப்பணிப்பிலுமே நாம் கல்வியில் முதன்மை நிலையினை கடந்த காலங்களில் எய்தியிருந்தோம்.  

இவ்வகையில் எமது வடமாகாணத்தினைப் பொறுத்தவரையில் நல்ல அதிபர்கள் எமது மண்ணை வளப்படுத்தியுள்ளார். இவ் நல்ல அதிபர்கள் பட்டியலில் எஸ்.சிவநேஸ்வரன் அவர்கள் மறக்க முடியாதவராக விளங்குகின்றார்' என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்து ஓய்வு பெறும் எஸ்.சிவநேஸ்வரனின் மணி விழா நிகழ்வுகள், விக்ரோரியாக்கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் வ.ஸ்ரீகாந்தன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(05) மானிப்பாய் இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. 

அந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது, 'அந்த வகையில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்து ஓய்வு பெறுகின்ற எஸ்.சிவநேஸ்வரன் இரண்டு பாடசாலைகளான சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளினை வளப்படுத்தியுள்ளார். 

மானிப்பாய் இந்துக்கல்லூரி 105 வருடங்கள் பழைமை வாய்ந்த கல்லூரியாக விளங்குகின்றது. எங்களுடைய பாடசாலைகளின் வரலாறுகள் சிறப்பானவை' என்றார்.

நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உரையாற்றும் போ,  'ஓவியத்திற்கு எவ்வளவு தூரம் புள்ளி முக்கியமானதோ அதே போன்று அதிபர் என்பவர் கல்லூரிக்கு மிக முக்கியமானவர்கள். சமூகத்தின் தலைவர்களாக அதிபர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் நாம் இன்று சுயநலமுள்ளவர்களாக இருக்கின்றோம். ஆனால் இப்பாடசாலையின் அதிபர் சுயநலமற்று பொதுநலம் பற்றி சிந்தித்தவர்' என தெரிவித்தார்.

வடமாகாண ஓய்வு நிலைக்கல்விப்பணிப்பாளர் வீ.இராசையா குறிப்பிடும் போது, 'கல்விப்புலத்தினை பொறுத்தவரை அதிபர்களது வகிபங்குகள் காத்திரமானவை. எந்த அதிபர் பாடசாலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றரோ அந்த பாடசாலை சிறப்பானதாக அமையும் இந்த வகையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியினை கடினமான காலத்தில்  தேசியமட்டம் வரை சாதனைகளினை படைத்து உச்ச நிலைக்கு கொண்டு சென்றவர்' என தெரிவித்தார்.

சண்டிலிப்பாய் கல்விகோட்டத்தின் ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர் த.தனபாலசிங்கம் உரையாற்றும்போது,  'மானிப்பாய் இந்துக்கல்லூரி குழப்பமும் மாணவர்களுக்கிடையே ஒழுக்கமின்மை, ஆசிரியர்களிடையே முரண்பாடுகள் என பல பிரச்சினைகள் காணப்பட்ட வேளை அப்பாடசாலையினை பொறுப்பேற்று அதனை மிகவும் சிறப்பான வகையில் ஒழுங்கமைத்து இன்று உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்' என கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .