2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆடையில் கேள்வியுடன் சபைக்கு வந்த உறுப்பினர்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (25) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்ற போது, ஆளுங்கட்சி உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் தனது ஆடையில் கேள்விகளை எழுதியவாறு சபை அமர்வில் கலந்துகொண்டார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரிடம் கேட்பதற்கென 12 கேள்விகளை தனது ஆடைகளில் ஒட்டியவாறு சபைக்கு வந்தார்.

அவரது மேலாடையில் எழுதப்பட்டிருந்த 12 கேள்விகளும் இவையே, 'வடமாகாண சபையில் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட சுமார் 200 தீர்மானங்களின் தொடர் நிலை என்ன?', 'மீள்குடியேற அனுமதிக்கப்பட்டு, வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?',  'சிதம்பர நலன்புரி நிலைய மக்களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஏன் இன்னமும் தாமதம்?'

'நெடுங்கேணி வைத்தியசாலையின் ஆளணி மற்றும் நிர்வாக பிரச்சினை ஏன் இதுவரையில் தீர்க்கப்படவில்லை?', 'வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் 85 வீதமான வேலைகள் பூர்;த்தியடைந்துள்ளதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறினார். முடிக்கப்பட்ட அந்த வீதிகள் எங்கே?', 'பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி நிலைத்திலுள்ள இராணுவ முகாமை அகற்றி இராணுவத்தை வெளியேற்ற நீதிமன்ற அனுமதி பெறுவது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?'

'வவுனியா மாவட்டச் செயலாளர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திரவை இடமாற்றம் செய்யும் விடயத்தில் ஏன் அசமந்த போக்கு காணப்படுகின்றது?'. 'மாகாண சபைக்குட்பட்ட குளங்களின் புனரமைப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?', 'வடமாகாண சபையின் தலைமை அலுவலகத்தை மாங்குளத்துக்கு மாற்றுவது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?', 'வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க மாகாண சபை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?'

'சம்பூர் காணியை விடுவிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பங்களிப்பு வழங்கியது போன்று, ஏன் வலிகாமம் வடக்கு காணியை விடுவிப்பதற்கு வடமாகாண ஆளுநர் பங்களிப்பு வழங்கவில்லை?', 'வடமாகாண சபையின் ஒப்பந்த வேலைகள் இன்னமும் மூடிய கதவுக்குள் தான் முடிவெடுக்கப்படுகின்றதா?',  விரைவில் இந்தக் கேள்விகளுக்கு தனது பதில் வேண்டும் எனவும் லிங்கநாதன் கோரியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .