2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பங்களிப்புடன் முன்னெடுக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2016 ஜனவரி 08 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடந்த டிசெம்பர் மாதம் மன்னார் நகர சபையினால் கேள்வி கோரல் முறையில் வழங்கப்பட்ட பண்டிகைக் கால விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற 05 மில்லியன் ரூபாய் வருமானத்தில் மிஞ்சியுள்ள சுமார் 3 மில்லியன் ரூபாய் மூலம் மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட 15 கிராம அலுவலகர்கள் பிரிவுகளில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல், மன்னார் நகர சபையில் நேற்று வியாழக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

இதன்போது மன்னார் நகர சபையினால் கடந்த பண்டிகைக்காலங்களில் குத்தகையாக பெற்றுக்கொள்ளப்பட்ட 05 மில்லியன் ரூபாய் நிதியில் 02 மில்லியன் ரூபாய் பாதீட்டில் உள்ளடங்கப்பட்ட வேலைகளுக்காகவும், எஞ்சிய 03 மில்லியன் ரூபாவுக்கு மேலதிக வருமானத்தினை குறை நிரப்பு வரவு - செலவுத் திட்டம் மூலம் 15 கிராம சேவகர் பிரிவுக்கும் தலா 0.2 மில்லியன் சதவீதம் குறித்த பிரதேசங்களின் அபிவிருத்திக்கு உதவும் வகையில் வீதி வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு சபையினால் உத்தேசிக்கப்பட்டதன் அடிப்படையில் மக்களின் அபிப்பிராயங்கள், மற்றும் ஆலோசனைகளை பெறும் வகையில் குறித்த அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் வகையில் மன்னார் நகர சபையின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், 15 கிராம சேவகர் பிரிவுகளையும் சார்ந்த கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சன சமூக நிலையங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்ற சமூக மட்ட அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அழைப்பின் பிரகாரம் மன்னார் நகரத்தின் அபிவிருத்தியில் அக்கறைகொண்ட பலர் கலந்துகொண்டனர்.

முதலில் நகர சபையின் செயலாளரினால் சபையின் நிகழ்கால, எதிர்கால செயற் திட்டங்களுடன் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கம் பற்றியும் விபரிக்கப்பட்டதுடன் கிடைக்கப்பெற்ற வருமானத்தில் மேற்கொள்ள வேண்டிய பொது மக்களின் தேவைகளை முன்வைக்குமாறும் அவரினால் கோரப்பட்டது.

இதற்கிணங்க பல வகை கிராமங்களையும் சேர்ந்த மக்களினால் பலதரப்பட்ட தேவைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை பொதுவாக நகர பிரதேசத்தின் பொதுத் தேவைகளாகவே காணப்பட்டன. 

இந்த வகையில் விளையாட்டு மைதான புணரமைப்பு, நகரத்துக்கான மணிக்கூட்டுக் கோபுரம், வடிகாலமைப்பு மற்றும் வைத்திய சாலையும் தலைமன்னார் வீதியும் இணையும் இடத்தில் சுற்றுவட்டம், வீதி அமைப்பு, வீதி விளக்கு பொருத்துதல் என்றவாறான தேவைகளும் முன் வைக்கப்பட்டது.

அத்துடன், கிடைக்கப்பெற்ற நிதியினை சகல கிராம சேவகர் பிரிவுகளுக்கும் பிரித்துக்கொடுத்து அந்தந்த பிரதேச வீதிகளை அமைப்போமாயின் அது போதியதன்று.

ஏனெனில், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவும் பல கிராமங்களையும், கிராமங்களின் தேவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 

இதனால் இடம்பெறவுள்ள வேலைத்திட்டங்களின் வெளியீடு சிறப்புற அமையப்பெறாது பூரணமற்றுக் காணப்படும்;.

இதனால்; ஒட்டு மொத்தமாக இந்நிதியினை நகரின் பொதுத் தேவையில் செலவிடுவோமாயின் அது நகர அபிவிருத்திக்கு அத்திவாரமாகவும், பூரணத்துவம் வாய்ந்ததாகவும் அமையும் என்ற ஏகோபித்த அபிப்பிராயத்தின் பிரகாரம் சீரற்ற வகையில் காணப்படுகின்ற மன்னார் பொது விளையாட்டரங்கு முதலில் புனரமைக்கப்படவும், நிதி மீதி காணப்படுமாயின் மன்னார் நகர பகுதியை அடையாளப்படுத்தும் வகையில் நகரின் மத்தியில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செயற்திட்டங்களை நகர சபையுடன் இணைந்த வகையில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதுணையாக 07 உறுப்பினர்களைக்கொண்ட செயற்திட்ட குழுவொன்றும் கலந்து கொண்டோர் மத்தியில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X