2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

‘எங்களை தமது தேவைக்குப் பயன்படுத்தினர்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஒக்டோபர் 24 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“கிளிநொச்சி யூனியன்குளம் பகுதியில் கடன் திட்டத்தில் வீடுகளைத் தந்து, எங்களை கடனாளிகளாக்கி விட்டு, வாக்குகளுக்காகவும் ஆர்ப்பாட்டங்களுக்காகவும் முன்னைய ஆட்சியாளர்கள் எங்களைப் பயன்படுத்தினார்களே தவிர, எங்கள் கிராமத்தில் எந்த அபிவிருத்திகளையும் அப்போதைய ஒருங்கிணைப்புத் தலைவர் முன்னெடுக்க முயலவில்லை” என கோணாவில் யூனியன் குளம் பகுதியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டத்தில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் காணிகளின்றி அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்ந்த 23 குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் கடந்த 2011ஆம் ஆண்டு கடன் வழங்கப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டன.

250,000 ரூபாய் வீட்டுக் கடன் வழங்கப்பட்ட நிலையில், குறித்த வீடுகளை அமைக்க முடியாமலும் இப்போது கடன்களை கட்ட முடியாமலும் இந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதில், பெருமளவான குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறியுள்ளதுடன் பல வீடுகள் பற்றைக்காடுகள் மண்டிக் காணப்படுகின்றன.

இது தொடர்பாக அம்மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

“யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியமர்ந்தவர்களுக்கு இலவசமாக வீட்டுத் திட்டங்களும் காணிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன எனத் தெரிவித்த அரசியல்வாதிகளும் அப்போதைய ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரச அதிகாரிகளும் எங்களை ஏமாற்றி இந்த வீட்டுத் திட்டங்களை தந்திருக்கின்றார்கள்.

இதில், நாங்கள் ஏமாந்து விட்டோம். இந்த நல்லாட்சி அரசாங்கம் இந்தக் கடன்களை இரத்துச் செய்து எங்களது வீடுகளை நாம் கட்டி முடிக்க உதவ வேண்டும்.

இதைவிட இந்தக் கிராமத்தில் எந்தவொரு வீதிகளும் புனரமைக்கப்படவில்லை. 2010ஆம் ஆண்டு மீள்குடியேறியதிலிருந்து எங்களுடைய பிரதேசத்தின் அபிவிருத்திகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றோம். ஆனாலும் எந்த அபிவிருத்தியும் இல்லை” எனக் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .