2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கடற்றொழிலாளர்களுக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பாடல் வசதி

George   / 2016 ஜனவரி 09 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

இந்திய றோலர்களின் அத்துமீறல்கள் தொடர்பான தகவல்களை, முல்லைத்தீவு கடற்றொழிலாளரகளுக்கும் கடற்படை, இராணுவம் ஆகியோருக்கிடையில் பரிமாறிக்கொள்வதற்கான தொடர்பாடலை உருவாக்கியுள்ளோமென முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கிடையில் சனிக்கிழமை (09) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

'கடற்படை, பொலிஸ் அதிகாரிகளுடன் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசப் பிரதிநிதிகள் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். தற்போதைய காலகட்டத்தில் இந்திய றோலர்கள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பதன் ஊடாக எமது கடல்வளம் சுரண்டப்படுகின்றது. இதனால், எமது மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடற்றொழிலாளர்களுக்கும், கடற்படை இராணுவம் என்பவற்றுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வினை ஏற்படுத்தி கடற்றொழிலாளர்களுக்கு உதவிகள் செய்யக்கூடியவகையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்திய றோலர்கள் எமது கடலில் அத்துமீறி நுழைகின்றபோது எமது கடற்றொழிலாளர்கள் சட்டத்தினை கையிலெடுக்கக்கூடாது. தகவல்கள் கிடைக்கின்றபோது இராணுவத்தினருக்கோ கடற்படைக்கோ தெரிவிக்கக்கூடிய விதத்தில் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இந்திய றோலர்களை எமது கடற்பரப்பில் காணுகின்றபோது தகவல்களை வழங்கக் கூடியவகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் தங்களுடைய மகிழ்வினைத் தெரிவித்துள்ளனர். இவை எல்லாம் நடைபெறுமானால் கடற்றொழில் சிறப்பாக இடம்பெற்று கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயருமென நான் நம்புகின்றேன்' என்றார்.

இக்கலந்துரையாடல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை கருத்துத் தெரிவிக்கையில், 'இன்றைய கலந்துரையாடலில் மாவட்டச் செயலர், கடற்படை, இராணுவத்தின் உயர் அதிகாரிகள், கரைதுறைபற்று பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எமக்கு ஒரு பயனுள்ள கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது. இக்கலந்துரையாடலில் கடந்த காலம் பற்றியல்லாது எதிர்காலத்தில் எமது கடல்வளத்தினை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டது.

இனிவரும் காலங்களின் இந்திய றோலர்களினால் நெருக்கடி வராதென நம்புகின்றோம்' எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X