2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கணவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில்லை

Niroshini   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“இறுதி யுத்தத்தில் யுத்த சூனியப் பிரதேசத்தில் அகப்பட்ட எனது கணவர் மற்றும் சகோதரரின் குடும்பம் ஆகியோர் இன்று வரையில் உயிருடன் இருப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. ஆகையால் மரணச் சான்றிதழ்களைத் தந்து நஷ்டஈட்டையும் பெற்றுதாருங்கள்” என இறுதி யுத்தத்தில் காணாமற்போன கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த மலையாளம் கோரமலை என்பவரின் மனைவி சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (26) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே குறித்தப் பெண் இவ்வாறு சாட்சியமளித்தார்.

“இறுதி யுத்தத்தில் மாத்தளன் வைத்தியசாலைக்கு பின்னால் எனது கணவர் மற்றும் எனது சகோதரன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஆகியோர் இருந்தனர். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பலத்த சண்டை இடம்பெற்றது.

அந்த உக்கிர சண்டையுடன் எனது கணவர் மற்றும் சகோதரரின் குடும்பம் காணாமற்போனார்கள். நாங்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டோம். இன்று வரையில் அவர்கள் பற்றிய தகவல் இல்லை.
கிராமஅலுவலரிடம் பதிவு செய்யச் சென்றபோது, கணவர் காணாமற்போனதை மாத்திரம் பதிவு செய்தார்.

சகோதரரின் குடும்பத்தில் ஒருவரும் இல்லாததால் நான் பதிவு செய்ய முடியாது என்றார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் போதும், அதே பதிலைச் சொல்லி கணவர் காணாமற்போனது தொடர்பான முறைப்பாட்டை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.

கணவர் இனியும் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில்லை. ஆகையால் எனக்கு மரணச் சான்றிதழ் மற்றும் நஷ்டஈடு ஆகியவற்றை பெற்றுத்தாருங்கள்” என்றார்.

இதனையடுத்து, விசேட பதிவுகளின் (தீர்வு காணப்பட்ட பதிவு) கீழ் அந்தப் பெண்ணின் விடயம் பதிவு செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X