Editorial / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - பூநகரிப் பிரதேசத்தில் மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்குரிய போதிய வளங்கள் மற்றும் சாரதிகள் இன்மையால், குடிநீர் விநியோகத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக, பூநகரிப் பிரதேச சபை செயலாளர் எம்.இராஜாகோபால் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில், பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தமக்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, பூநகரி பிரதேசத்தில் 11க்கும் மேற்பட்ட கிராமஅலுவலர் பிரிவுகளுக்கு தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இருந்தபோதும், பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாகவும் தமக்கான குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும், குடிநீர்த் தேவை நிலவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் பூநகரிப்பிரதேச சபை செயலாளர் எம்.இராஜகோபாலிடம் கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர்தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“ஏற்கெனவே பூநகரி பிரதேச சபையால் தொடர்ச்சியாக குடிநீர்விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு குடிநீர்விநியோகத்தை மேற்கொள்வதற்கு வாகன வசதி மற்றும் சாரதிகள் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. இவ்வாறு நெருக்கடிகள் காணப்படுகின்றபோதும், இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
“கடந்த ஆண்டு வரட்சியின்போது, அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் பிரதேச செயகம் ஊடாக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
“இவ்வாறு நிறுத்தப்பட்ட பகுதிகளிலேயே குடிநீர் தேவை காணப்படுகின்றது. தற்போது பிரதேச செயலகத்திடம் 12,500 லீற்றர் நீர் கொள்ளவு கொண்ட தண்ணீர் பவுசர் ஒன்றைக்கோரியிருக்கின்றோம். அது கிடைக்கும் பட்சத்தில், அந்தப் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தையும் மேற்கொள்ளமுடியும்” எனக் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .