Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
George / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டுச்; சம்பவத்துடன் தொடர்புடையவர் குறித்து சாட்சியமளிக்க முன் வந்த 15 வயது மாணவனை, முருங்கன் பொலிஸார் அழைத்துச் சென்று சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பான விசாரணை புதன்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றுள்ளது.
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றினுள் கடந்த 5 ஆம் திகதி இரவு உள் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்த பொறுமதியான பொருட்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்த போது வீட்டில் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றது தெரியவந்தது.
உடனடியாக அயலவர்களின் உதவியுடன் தேடுதல்களை மேற்கொண்ட போது குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண், கட்டைக்காடு பகுதியில் வைத்து மக்களினால் பிடிக்கப்பட்டு முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன் போது, திருட்டுச் சம்பவம் இடம் பெற்ற வீட்டு உரிமையாளரின் பெறா மகனான 14 வயதுடைய பாடசாலை மாணவன், குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கண்டதாக சாட்சியமளிக்க முன் வந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த மாணவனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற முருங்கன் பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற முறையில் கைகளை கட்டி,ஆடைகளை களைந்து பல்வேறு வகையில் மாணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, மாணவன் அன்றைய தினம் இரவே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முருங்கன் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்ட குறித்த மாணவன், உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுவன் மீது முருங்கன் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை புதன்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்தில்; விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் சார்பாக சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஆஜராகினார். இதன்போது, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வவுனியா பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக சட்டமா அதிபரிடம் இருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, வழக்கேடு மற்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் வைத்திய சான்றிதல் என்பவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, முருங்கன் பகுதியில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அண்மையில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் ஒருவர் மீது அண்மையில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மற்றுமொரு வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago