2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றம்: சாந்தி

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழ் மக்களின் காணிகள் அத்துமீறி பிடிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு தொடர்ந்து சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'இலங்கை வீடமைப்பு அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசத்துக்கு உட்பட்ட சம்பத்நுவர, இசுறுபுர என்ற பெயர்களில் சிங்கள குடியிருப்பு கிராமங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீடமைப்பு அமைச்சர், நேரடியாக வருகை தந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளான மணலாறு பிரதேசத்தில் சம்பத்நுவர, இசுறுபுர என்ற பெயர்களில் சிங்கள குடியிருப்பு கிராமங்கள் புதிதாக இம்மாதம் 11ம் திகதி ஆரம்பித்து வைத்துள்ளார். இக்கிராமங்களில் குடிநீர், மின்சார வசதி போன்ற சகல வசதிகளுடன் 24 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் நிலங்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பின் சாட்சிகளில் ஓரிடமாக காணப்பட்டுவரும் மணலாறு பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடப் பகுதியாகும். இங்கே மகாவலி அபிவிருத்தி எல் வலயம் என்ற திட்டத்தினூடாக ஆரம்பிக்கப்பட்ட வெலிஓயா நில ஆக்கிரமிப்பு செயற்பாடு, இன்றுவரை ஆட்சிக்கு வருகின்ற சகல அரசாங்கங்களினாலும் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது.

வெலிஓயா என்ற பெயரில் புதிய பிரதேச செயலாளர் பிரிவு, முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை அத்துமீறி பிடிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு தொடர்ந்து சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட எமது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து எமது மக்களை மேலும் மேலும் விரக்தி நிலைக்கு உள்ளாக்கி வருகின்றது. எனவே, இவ்வாறான நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகளும் அவற்றில் சிங்கள மக்களை குடியேற்றுவதும் இராணுவத்தினர் தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து நிற்பதும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

நில ஆக்கிரமிப்புக்கள் தமிழ் மக்களின் மரபுரிமைகளை சிதைக்கும் நோக்கிலும் வடக்கிலிருந்து கிழக்கு வரை நீண்டு செல்கின்ற தமிழ் மக்களின் நிலத்தொடர்ச்சியை துண்டாடும் நோக்கிலுமே ஆரம்பிக்கப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும். எமது மக்களின் அடிப்படை அபிலாசைகளை அவர்களின் உரிமைகளை புறக்கணித்து எமது நிலங்களில் மேற்கொள்ளப்படும் இச்செயற்பாடுகளை இவ் அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X