2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மக்கள் காணியிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள்

Niroshini   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்துக்காக பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கையை நல்லாட்சி அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா வலியுறுத்தியுள்ளார்.

புதுக்குடியிருப்பு விசுவமடுவிலுள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்துக்காக நிலஅளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்ய முயற்சி செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா ஆகியோரின் எதிர்ப்பினை அடுத்து அளவிடும் பணி கைவிடப்பட்டது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொட்டியடி இராணுவ முகாம் உள்ள காணியில் பொதுமக்கள் இடம்பெயரும் வரை இருந்ததாகவும் மீள்குடியேற்ற காலத்தின் போது அது இராணுவ முகாமாக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து 7 வருடங்களாக உரிய அதிகாரிகளிடம் தமது காணியை பெற்றுத் தருமாறு காணிக்கு உரித்தான மக்கள் அலைந்து திரிந்தனர்.

அவ்வாறு இருந்தும், இன்றைய தினம் அநியாயமான முறையில் பொதுமக்களின் காணிகளை நிலஅளவைத் திணைக்களத்தினர் அளவீடு செய்ய முயற்சித்தமை மிக மோசமாகவுள்ளது.இந்த விடயம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

அத்துடன், வடமாகாண முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கூறியதுடன்இ எழுத்து மூலமாகவும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாகக் கூறினார். தொட்டியடி இராணுவ முகாம் மட்டுமல்ல, முல்லைத்தீவு மாவட்டத்திலே வேறு பல இராணுவ முகாம்களும் உள்ளன.

நாயாறு கடற்படை முகாம், சிலாவத்தை இராணுவ முகாம், சுதந்திரபுர முகாம், புதுக்குடியிருப்பு செயலகத்துக்கு முன்னால் உள்ள முகாம் ஆகியன தொடர்ந்து வருகின்ற மூன்று நாட்களில் அளவீடு செய்யப்படவுள்ளது. இவற்றை அரசாங்கம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். யுத்த காலத்தில் அனைத்து சொத்துக்களையும் இழந்து, வெறுங்கையோடு மீள்குடியமர்ந்த எமது மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பது என்பது மிகவும் படுமோசமான நிலைமையாகவே கருதவேண்டியுள்ளது.

ஆகவே, நல்லாட்சி அரசாங்கத்திடம் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டு, எமது மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X