2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மரணச்சான்றிதழ் பெறுவதற்கு வற்புறுத்திய ஜனாதிபதி ஆணைக்குழு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

காணாமற்போன ஆசிரியரின் சம்பளத்தை அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதற்கு ஆசிரியரின் மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் வற்புறுத்தினர்.

'எனது கையால் கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்தேன். வெறும் சம்பளத்துக்காக கணவர் இறந்துவிட்டதாக என்னால் மரணச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியாது' என ஆசிரியரின் மனைவி மறுத்துவிட்டார்.

காணாமற்போனாரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அமர்வு இன்று திங்கட்கிழமை (25) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது இராணுவத்தில் ஒப்படைத்து காணாமற்போன கிருஸ்ணபிள்ளை சாந்தகுமார் என்பவரின் மனைவி வாசுகி சாட்சியமளித்தார். அவர் சாட்சியமளிக்கையில்,

எனது கணவர் 1996 ஆம் ஆண்டு தொடக்கம் கணித பாட ஆசிரியராக கடமையாற்றினார். வடமராட்சி கிழக்கு பகுதியில் இருந்து, தொடர்ந்து யோகபுரம் மகா வித்தியாலயம், தேறாங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என கடமையாற்றிய கணவர் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் துணுக்காய் ஐயன்கன்குளம் வித்தியாலயத்தில் பணியாற்றினார். அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கீழ் இருந்த, தமிழீழக் கல்விக் கழகத்தில் சம்பளத்துக்கு கணக்கு பார்க்கும் பணியை மேற்கொண்டார்.

ஒருநாள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களையும் சரணடையுமாறு கூறிய உத்தரவுக்கமைய எனது கணவரை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அதிகாலை 5.45 மணிக்கு இராணுவத்திடம் நானே ஒப்படைத்தேன். எனது கணவரை பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் தகவல் இல்லை.

2010 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் அவருடைய சம்பளப் பணம் எனக்கு கிடைத்தது, அதன்பின்னர் நிறுத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடமிருந்து கடிதம் ஒன்று எனக்கு கிடைத்தது.

'பயங்கரவாதச் செயல் காரணமாக காணாமற்போன அரச உத்தியோகத்தருக்கு சம்பளம் வழங்கும் சரத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் தற்காலிகமாக சம்பளம் வழங்கப்பட்டதாகவும், மேற்கொண்டு வழங்க முடியாது என்றும், அவ்வாறு மேற்கொண்டு மேலதிக நன்மைகளைப் பெறுவதாக இருந்தால் மரணச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனது கையால் இராணுவத்தினரிடம் கொடுத்த கணவருக்கு ஏன் நான் மரணச்சான்றிதழ் எடுக்க வேண்டும்?. எனது 3 பிள்ளைகளும் நானும் கஸ்ரத்தில் வாழ்கின்றோம். எனது சகோதரர் தற்போது எங்களைக் கவனிக்கின்றார். தொடர்ந்தும் கவனிப்பது கடினம். கணவரின் சம்பளப் பணத்தைப் பெற்றுத்தர ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நான் சாட்சியமளிக்க வருiயில், திரும்பி வரும்போது அப்பாவுடன் வருவீர்கள் தானே? என என் பிள்ளைகள் என்னிடம் கேட்கின்றனர். தந்தையை பிடித்துச் சென்றதால் எனது ஒரு பிள்ளை உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு பதிலளித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், மரணச் சான்றிதழைப் பெற்றால் மாத்திரமே சம்பளப் பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க முடியும் என்றனர். அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்து, சம்பளத்துக்காக மரணச்சான்றிதழ் எடுக்க முடியாது. எனக்கு கணவன் வேண்டும், என் பிள்ளைகளுக்கும் தந்தை வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X