2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முள்ளிக்குளம் மக்களை சந்தித்தார் குரே

George   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை(21) மாலை மன்னாருக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார்.

மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்துக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநர், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களை சந்தித்து உரையாடினார்.

இதன்போது, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை, வன்னி மாவட்ட கிறிஸ்தவமத இணைப்பாளர் பாஸ்டர் சந்துரு உட்பட வடமாகாண ஆளுநரின்  இணைப்பாளர்,செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நில மீட்பு போராட்டம் இடம் பெற்று வரும் பகுதிக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த வடமாகாண ஆளுநர், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் கிராம மக்களுடன் நீண்ட நேரம் உரையாடினார்.

வடமாகாணத்தில் பல்வேறு போராட்டங்கள் இடம் பெற்று வருகின்ற போதும் முதல் முதலாக வடமாகாண ஆளுநர், முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டத்தில் பங்கெடுத்தமை குறித்து முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும், தமது போராட்டம் குறித்தும்,தமது பூர்வீக நிலம் விடுவிப்பு குறித்தும் முள்ளிக்குளம் கிராம மக்கள் வடமாகாண ஆளுனரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

தமது பூர்வீக நிலங்களை விட்டு கடற்படையினரை வெளியேற்றி தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் எனவும், தமது நிலம் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என தெரிவித்த முள்ளிக்குளம் கிராம மக்கள், தமது நிலம் விடுவிப்பிற்கு  வடமாகாண ஆளுநர் துரித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட வடமாகாண ஆளுநர், “கடந்த காலங்களில் வாழ்ந்து வந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளில் மக்கள் மீண்டும் குடியேற்றப்பட வேண்டும். எனவே முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டத்துக்கு நான் மதிப்பளிக்கின்றேன்.

உங்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதியை சந்தித்து முழுமையான விவரங்களையும் சமர்ப்பித்து நல்லதொரு முடிவை பெற்றுக்கொண்டு சில தினங்களில் மீண்டும் முள்ளிக்குளம் வந்து உங்களை சந்திக்கின்றேன்” என, தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .