2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்று சொல்லும் உரிமை வட மாகாண சபைக்கு இல்லை

Niroshini   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடக்கு மாகாண சபை எடுத்த எடுப்பிலே தங்களுடைய தீர்வாக என்ன வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் இஸ்லாமியர்களுக்கு இதைக்கொடுங்கள், மலையகத்தவர்களுக்கு இதைக்கொடுங்கள், வேறு மாகாணத்தவர்களுக்கு இதைக்கொடுங்கள் என சொல்வது நியாயமில்லை” என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா, நெளுக்குளத்தில்  நேற்று சதொச கிளையை திறந்து வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“வட மாகாணசபை உறுப்பினர்களாக இருக்கலாம் முதலமைச்சராக இருக்கலாம் அல்லது தமிழரசுக்கட்சியாக இருக்கலாம் அவர்கள் தங்களுக்கு என்ன தேவை என்று சொல்வதற்கு உரிமை இருக்கின்றது. ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு என்ன தேவை உள்ளது என்று செல்வதற்கான உரிமை இல்லை.

10 சதவீதமாக இருக்கின்ற தமிழர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, அவர்களுக்கு உதவ வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. ஆனால் 9.6 சதவீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதனை சொல்லும் உரிமை இவர்களுக்கு இல்லை என்பதனை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் தனிநாடு கேட்டு விடுதலைப்புலிகள் உட்பட பல இயக்கங்கள் போராடினார்கள். அதன் பின்னர் இந்தியாவினால் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. கிழக்கு மாகாண மக்களின் எந்த கருத்தும் உள்வாங்கப்படாமல் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றத்தால் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டது.

தற்போது மிக நீண்ட காலமாக இந்த விடயத்தில் எமது கட்சி கூட்டங்களை கூட்டி ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. எம்மை பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இக் கட்சி உள்ளது. அத்துடன் கொழும்பிலும் அநுராதபுரத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எமது கட்சி கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் நாம் எமது தீர்வு விடயத்தில் இறுதி நிலையை அடைந்திருக்கின்றோம் என்றாலும் இதனை இன்னும் மெருகூட்டி பிரதமரிடத்திலேயும் ஜனாதிபதி இடத்திலும் சபாநாயரிடமும் அரசியல் அமைப்பு சபையிடமும் பாரம் கொடுப்பதற்கு முன்னர் சிறுபான்மை கட்சிகளுடன் பேச இருக்கின்றோம்.

அனைத்து கட்சிகளுடனும் நாம் பேசி தேர்தல் முறையில் சிறு கட்சிகளுக்கு சிறுபான்மை இனத்துக்கு எந்த பிரச்சினையும் வராத வகையில் நாம் பாடுபடுவோம். அதனையும் மீறி எம் மீது திணிக்கப்பட்டால் நீதிமன்றத்துக்கு செல்லவும் தயாரகவுள்ளோம்.

அத்துடன், அரசியல் அமைப்பு மாற்றத்தில் ஒரு நியாபூர்வமாக எல்லா இனமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லா மதமும் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க நாம் எமது பூரண ஒத்துழைப்பை கொடுப்போம் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X