2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக ஜனாதிபதியின் சந்திப்பில் முடிவு

Niroshini   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான இடத் தெரிவில் உள்ள குழப்ப நிலை தொடர்பில் ஜனாதிபதி சந்திப்பின் பின் முடிவு எட்டப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வவுனியாவில் இருந்து சென்ற விசேட குழுவிடம் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா அமைப்பது என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, எம்.பி.நடராஜா, இ.இந்திராசா, வட மாகாண சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ, வர்த்தக சங்க பிரதிநிதிகளான த.இராசலிங்கம், புலேந்திரன் ஆகியோர் நேற்று (25) வட மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து குறித்த குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும், வவுனியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட இந்த பொருளாதார மத்திய நிலையத்துக்கான நிதி திரும்பிச் செல்லாது, வவுனியா மாவட்டத்திலேயே பயன்படுத்தப்படும் என தெரிவித்த முதலமைச்சர், எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திபால சிறிசேனாவை சந்திக்கும் போது ஓமந்தையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஓமந்தையில் இப் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது விருப்பமா என முதலமைச்சர் வினவியதாகவும் அதற்கு அனைவரும் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X