2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கணவர் இருந்தமைக்கான பெயர் விபரம் பார்த்தேன்

Niroshini   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'முள்ளிவாய்க்காலில் வைத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் எனது கையால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட கணவர், அதன் பின்னர் யோசப் மற்றும் பூசா முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, முகாம்களில் ஒட்டப்பட்டிருந்த பெயர் விபரங்களில் கண்டேன்' என காணாமல்போன செல்லையா விஸ்வநாதன் (வயது 47) என்பவரின் மனைவி சாட்சியமளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும்  ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அமர்வு இன்று திங்கட்கிழமை (25) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

'விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளியாகவிருந்த எனது கணவரை, இறுதி யுத்தத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எனது இரண்டு பிள்ளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இராணுவத்திடம் ஒப்படைத்தேன்.

பாதிரியார் பிரன்சிஸூடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் எனது கணவரையும் பஸ் ஒன்றில் ஏற்றிச் சென்றனர். அதன் பின்னர் எனது கணவர் யோசப் மற்றும் பூசா முகாங்களில் உள்ளதாக அறிந்தேன். ஆனால் அவரை சந்திக்கவில்லை.

7 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எனது கணவர் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஆணைக்குழு எங்களிடம் மட்டுமே விசாரணை செய்கின்றது. எனது கணவர் காணாமற்போனமை தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளேன். இத்தனை விடயங்களைச் செய்யும் அரசாங்கத்துக்கு, எனது கணவரைக் காட்டுவதற்கு கால அவகாசம் தேவையில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X