2025 ஜூலை 12, சனிக்கிழமை

'காணிகளை விடுவிக்கவும்'

Niroshini   / 2017 ஜனவரி 23 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில் படையினரின் பயன்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிடுத்து, தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறு, 346 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், பதிவுகளையும் மேற்கொண்டுள்ளன.

கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில் அதிகளவான தனியார் காணிகள் மற்றும் அரச காணிகள் முப் படையினரின் பயன்பாட்டில் இருக்கின்றன.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள, மட்டுவில்நாடு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் 6 குடும்பங்களினது குடியிருப்புக்காணிகள், இராணுவத்தினரது பயன்பாட்டில் இருக்கின்ற அதேவேளை, மட்டுவில்நாடு மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் 4 குடும்பங்களினது காணிகள், பொலிஸாரின் பயன்பாட்டில் இருக்கின்றன.

அத்துடன், இரணைதீவு கிராம அலுவலகர் பிரிவிலுள்ள இரணைதீவுப் பகுதியில் 336 குடும்பங்களினது காணிகள் மற்றும் வீடுகள் என்பன, கடற்படையினரின் பயன்பாட்டில் இருக்கின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல், குறித்த காணிகள் மற்றும் வீடுகள் இவ்வாறு படையினரின் பயன்பாட்டில் இருந்து வருவதனால், இவற்றின் உரிமையாளர்களான தாங்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதாகவும் எனவே, இதனை விடுவித்துத் தருமாறு இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, பூநகரி மட்டுவில்நாடு கிழக்குப் பகுதியில் வைத்தியசாலை கமநலசேவை நிலையம் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் உள்ளடங்கிய வகையில் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளும் பொதுமக்களுக்குச் சொந்தமான 14 வரையான காணிகளையும் தொடர்ந்து இராணுவத்தினர் தமது பயன்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது தமது காணிகளை விடுவித்து தங்களது காணிகளில் மீள்குடியேற அனுமதிக்குமாறு, 6 குடும்பங்கள் தமது பதிவுகளைக் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டுள்ளன.

இதேபோன்று, மட்டுவில்நாடு மேற்குப்பகுதியில் பொலிஸ் நிலையம், பொலிஸார் விடுதி மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் என்பன இயங்கி வரும் காணிகளை விடுவிடுத்து, அதில் தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறு, 4 குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

இதேவேளை, கடற்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட தங்களது பூர்வீக நிலமான இரணைதீவில் சென்று வாழ்வதற்கும் அங்கு தொழில் செய்வதற்கும், 336 குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

இவ்வாறு பூநகரி பிரதேசத்திலுள்ள தங்களது பூர்வீக நிலங்களில் குடியேறி வாழ்வதற்கான உரிமைகளை, நல்லாட்சி அரசாங்கம் வழங்கவேண்டும் என, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளதுடன், பூநகரி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தினது காணி, பல்லவராயன்கட்டு தென்னந்தோட்டக்காணி மற்றும்  மரமுந்திரிகைத்தோட்டம் என்பவற்றையும் விடுவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .