2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

குளம் உருவாக்குவதன் மூலம் பூநகரி வளம் பெறும்

Niroshini   / 2016 மார்ச் 13 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

'பூநகரிப் பகுதியில் குளம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் உவரடைந்துவரும் பூநகரியின் பல பிரதேசங்கள் வளம் மிகுந்த பகுதிகளாக மாறும்' என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.

பூநகரிப் பிரதேசத்தில் பல பகுதிகள் உவரடைந்து வருவது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'பூநகரிப் பிரதேசத்தில் கரியாலைநாகபடுவான், குடமுருட்டி குளங்கள் நீர்ப்பாசனக் குளங்களாகவுள்ளன. இவ்வாண்டில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான கூட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன.

அதைவிட, சிலவேலைத் திட்டங்களும் நடைபெறுகின்றன. தற்போது பூநகரிப் பிரதேசம் வரண்ட பிரதேசமாக காணப்படுகின்ற போதிலும், வளத்தை மேம்படுத்தக்கூடிய பல வாய்ப்புக்களுள்ளன.

இப்பகுதியில் அக்கராயன் ஆற்றுப்படுக்கை, மண்டைக்கல்லாறு ஆற்றுப்படுக்கை, பல்லவராயன்;கட்டு ஆற்றுப்படுக்கை ஆகியவை காணப்படுகின்றன. மேற்படி நீர்வளத்தை முறைப்படி பயன்படுத்தாத நிலைமை காணப்படுகின்றது. அவ் நீர்வளத்தை முறைப்படி பயன்படுத்தினால் இப்பிரதேசம் சிறப்படையும்' என்றார்

'அக்கராயன் ஆற்றுப்படுக்கையின் கீழ் குடமுருட்டிக்குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பூநகரி வடக்குப் பிரதேசத்தில் கொக்குடையான், மாளாப்பூ போன்ற பகுதிகளை இணைத்து பூநகரிக்குளம் அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ளன. அக்குளத்தை அமைப்பதன் மூலம் இப்பிரதேசம் வளம்பெறும்.

குடமுருட்டியாறு பரந்தன் பூநகரி வீதியினைக் குறுக்கறுத்துப் பாய்கின்றது. இதன்வழியாகவே உவர்நீர் பரம்பலும் இடம்பெறுகின்றது. இப்பகுதியில் உவர்த்தடுப்பணை அமைக்கப்படவேண்டும்.

இதேபோன்று மண்டைக்கல்லாறு பாய்கின்ற ஏ-32 வீதியில் உவர்த்தடுப்பணை அமைக்கப்படவேண்டும்.
மண்டைக்கல்லாறு கடலுக்குச் செல்லாமல் நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் பூநகரி வளம் பெறும்.

மேலும், வன்னேரிக்குளம், கரியாலைநாகபடுவான், பன்றிவெட்டி, தேவன்குளம் ஆகிய குளங்களை இணைத்து நீர்த்தேக்கம் உருவாக்குவதற்கான திட்டங்களும் உள்ளன' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X