2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'சந்தர்ப்பவாதத்துக்காக கூட்டமைப்பை சிதைக்கக் கூடாது'

George   / 2017 மார்ச் 19 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

“எங்களுடைய அணுகுமுறைகளுக்கு பலம் சேர்ப்பது சர்வதேச சமூகமும் புலம்பெயர் சக்திகளும் தான். எனவே, சர்வதேச அணுகுமுறைகளைப் பகைத்து அவர்களுடைய சில அனுசரிப்பு ஒழுங்குகளை எங்களுடைய அரசியல் வியூகங்களாக மாற்றி நாங்கள் பயணிக்க வேண்டிய தேவையுள்ளது”  என, தமிழத் தேசியக் சுட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்   தெரிவித்தார்.

கிளிநொச்சி, பூநகரிப்பிரதேசத்தின் அமைந்துள்ள ஆலங்கேணி, சாமிப்புலம், முக்கொம்பன், நேரடம்பன் ஆகிய கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளை   சந்தித்து, சனிக்கிழமை கலந்துரையாடியபோது, அவர் இதனைக் கூறினார்.

“ஜெனீவாவில் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இவ்வேளையில், வெளியே குழப்பகரமான அரசியல் கருத்துக்கள் பகிரப்படுவதையும் மக்களிடையே ஒருவித அரசியல் சஞ்சலநிலை காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

சாதாரண பொதுமக்கள் மிகத்தெளிவோடு இருக்கிறார்கள். ஆனால் ஓரிரு ஊடகங்களும் ஒருசில அரசியல் தலைவர்களும் மக்களுக்கு தெளிவற்ற கதையினை கூறமுனைகிறார்கள்.

இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் ஒத்துக்கொண்டவற்றில் இதுவரை ஒன்றையும் செய்யவில்லை. இனிமேலும் செய்யுமென்று நாங்கள் நம்புகின்ற நிலை கிடையாது.

ஆனால், ஜெனீவாவில் போர்க்குற்ற விசாரணை குறித்த தீர்மானத்தை அரசியல்கட்சி என்ற வகையில் நாங்கள் கொண்டுவர முடியாது. ஆனால், இங்கு நடந்தவற்றை புரிந்து கொண்ட  அமெரிக்காவே 2011 இல்  தீர்மானத்தைக் கொண்டு வந்தது.
தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகளே விசனம் அடைந்துள்ள  நிலை தற்போது காணப்படுகிறது. அதனால் தான், கால அவகாசம் ஒன்றை காலஅட்டவணை நிமித்தம் வழங்க உள்ளதாக தெரிகிறது.

சர்வதேச நீதித்துறையின் தேவை எழுகிறபோது பலம் மிக்க நாடொன்றின் மூலமே வழக்குத் தொடுப்பு மேற்கொள்ள முடியும்.

இன்று எங்களுடைய அணுகுமுறைகளுக்கு பலம் சேர்ப்பது சர்வதேச சமூகமும் புலம்பெயர்சக்திளும் தான். எனவே, சர்வதேச அணுகுமுறைகளைப் பகைத்து அவர்களுடைய சில அனுசரிப்பு ஒழுங்குகளை எங்களுடைய அரசியல் வியூகங்களாக மாற்றி நாங்கள் பயணிக்க வேண்டிய தேவையுள்ளது.

அதற்காக, கொள்கைகளை கைவிட்டு விட்டோமென்று விசமப் பிரசாரங்களை மேற்கொள்ளக்கூடாது. கூர்மதி கொண்ட எமது தலைமைகள், பொது எதிரிக்கு எதிராக போராடவேண்டுமே தவிர, தமிழ் மக்களின் பலமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தர்ப்பவாதத்துக்காக சிதைக்க முனையக்கூடாது.

மக்கள் எமக்கு அளித்த ஆணைக்கும் அவர்களின் அபிலாஷைகளுக்கும் ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .