2025 ஜூலை 16, புதன்கிழமை

மன்னாரில் கடும் வரட்சி

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறுநீலா சேணை கிராமம் உட்பட அதனை அண்டிய கிராமங்களிலும் பாரிய வரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில், மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நீலாசேணை விவசாய அமைப்பின் செயலாளர் ஆர்.கிங்ஸ்லி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக  குடி நீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எமது கிராமங்களில், கிணறுகளிலுள்ள நீர் வற்றிவருகின்றது. மேலும் ஒரு சில கிணறுகளில் காணப்படுகின்ற நீர் உவர் நீராக காணப்படுகின்றது.

நீர் தட்டுப்பாட்டினால் விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டச் செய்கையும் பாதிப்படைந்துள்ளது. குளங்களிலுள்ள நீர் வற்றியுள்ள நிலையில் வீட்டுத்தோட்டங்களும் பாதிப்படைந்துள்ளது.

மேலும் தற்போது, எமது கிராமத்தில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எமது கிராமத்தில் மீள் குடியேறியுள்ள 15 குடும்பங்களும், நொச்சிக்குளம் மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய கிராமங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.

மன்னார் பிரதேச சபையினால் வாரத்தில் ஒரு தடவை குடி நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் அவை எமக்கு போதாமல் உள்ளது. 2009 ஆம் ஆண்டு மக்கள் இக்கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். தற்போது இந்திய வீட்டுத்திட்டம் மாத்திரமே எமது கிராமத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆனால், மின்சாரம், குடி நீர், பாதை புனரமைப்பு போன்றவை இது வரை எமது கிராமத்தில் இல்லை. இதனால் மக்கள் விசப்பூச்சிகளின் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர்.

எனவே, எமது கிராமத்தில் தற்போது நிலவி வரும் குடி நீர் பிரச்சினையை தீர்த்து வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நீலாசேணை விவசாய அமைப்பின் செயலாளர் ஆர்.கிங்ஸ்லி மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X