2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

10,000 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டும் காணாமலும் போயுள்ளனர்: சிவசக்தி ஆனந்தன்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டும்  காணாமலும் போயுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை மைதானத்தில் காணாமல் போனோர் தொடர்பில்  இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற   கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இன்று புதிய அரசாங்கம் வந்துள்ள நிலையில், அவர்களுக்கு காணாமல் போனோர் தொடர்பில் கவனத்துக்கு  கொண்டுவரும் நோக்கோடு இந்த சாத்வீக போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில்,  காணாமல்  போனோரின் குடும்பங்களிடம் அவர்களின் விபரங்களை திரட்டி அவர்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். எந்த சிறைகளில் உள்ளார்கள் என்பது தொடர்பில் தகவல்களை வெளியிட வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் காணாமல் போனோர் படுகொலை செய்யப்பட்டிருந்தால், இந்த அரசாங்கம் வெளியில் சொல்லவேண்டும். படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்.

வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலுமாக 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். இங்கு உள்ள ஒவ்வொரு தாய்மார்களும் தங்களது பிள்ளைகளுக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட ஆட்சி மாற்றம் வேண்டும்; என்று  தற்சமயம் ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்துள்ளார்கள்.

புதிய அரசாங்கம், இந்த பிரச்சினையை நீடிக்காமல் மிக விரைவாக இந்த குடும்பங்களுக்கு அவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவேண்டிய பெரிய பொறுப்பும் காணப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளிநாடுகளில் அகதிகள் என்ற பெயரில் இலங்கையர்கள் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். அதேபோல் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளும் எங்கேயும் இருக்கக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு இவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .