2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணி உறுதி, வீட்டுத்திட்டம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாதன்திட்டம் மற்றும் புன்னைநீராவி பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களது காணிகளின் உறுதிப்பத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் ஆகியவற்றைப் பெற்றுத்தருமாறு கோரி புதன்கிழமை (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாகச் சென்று மாவட்டச் செயலாளரிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட மேற்படி பகுதி மக்கள், தாங்கள் 25 தொடக்கம் 30 வருடகாலமாக அந்தக் காணிகளில் குடியிருப்பதாகவும் தங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் இதுவரையில் வழங்கப்படாமையால் வீட்டுத்திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் கூறினர்.

மின்சாரம், வீதி ஆகிய அடிப்படை வசதிகளும் தங்கள் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவில்லை என கூறினர்.

இந்த மக்களின் கோரிக்கை தொடர்பில் கருத்து கூறிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், 'கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சிவபுரம், நாதன்திட்டம், புன்னைநீராவி, பிரமந்தனாறு ஆகிய பகுதிகளில் மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் குடியேறிய 1050 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுடைய காணிகள் தனியார்களுக்குச் சொந்தமான காணிகள். அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் அல்லது வெளியிடங்களில் உள்ளனர். காணி உரிமையாளர்கள் காணிகளை கேட்கும்போது காணிகளை வழங்க வேண்டும்.

இது தொடர்பான முடிவை மாகாண காணி ஆணையாளர் தான் தீர்மானிக்கவேண்டும். இந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தெரிவித்திருந்தேன். அதற்கு அவர் 3 மாத கால அவகாசம் தருமாறும், அதற்குள் சாதகமான பதிலை வழங்குவதாகவும்' கூறினார்.

'மக்களுக்காக சேவை செய்யும் நாங்கள், மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவோம். நீண்ட காலமாக அந்தப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தகுந்த பதிலை வழங்குவோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .