2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'காடுகளை அழிக்கும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயங்குகின்றனர்'

Gavitha   / 2015 ஜூன் 10 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் காடுகளை அழித்து பல ஆண்டு கால பெறுமதியான மரங்களை, சில விசமிகள் கடத்திச் செல்லும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளநிலையிலும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு  பொலிஸர் தயக்கம் காட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

காடழிப்பு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இன்று பரவலாக காடழிப்பு இடம்பெற்று வருகின்றது. பல செல்வாக்கான நபர்களின் ஊடாக காடுகள் அழிக்கப்பட்டு, இரவு வேளைகளில் டிப்பர்களில் கற்கள் மற்றும் வேறு பொருட்களுடன் சேர்த்து பெறுமதியான மரங்களும் கடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக நாம் ஏற்கெனவே பொலிஸார் மற்றும்  ஜனாதிபதி வரை தெரியப்படுத்தியுள்ளோம். எனினும் இன்று சுற்றுச்சூழல்  பற்றி பேசும் ஜனாதிபதி, இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே ஆதங்கமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வவனியாவில் மாளிகை கிராம சேவகர் பிரிவில் பிராமணத்தி கூழாங்குளம் மேற்கு பக்க காடு, அலைகல்லு போட்டகுளம் காடு,  ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவில் மரையடித்தகுளம் காடு, மகிழங்குளம் கிராம சேவகர் பிரிவில் மகிழங்குளம் காடு,  மருதங்குளம் கிராம சேவகர் பிரிவில் நாகப்புலம், மருதோடை காடு, சேமமடு கிராம சேவகர் பிரிவில் சேமமடு காடு, கள்ளிக்குளம் பிரிவிலும் பாவட்டங்குளம் காடு போன்ற காட்டுப்பகுதிகளில் இவ்வாறான பெறுமதி மிக்க பாலை மற்றும் முதிரை மரங்களுடன் சிறிய முதிரை மரங்களும் கடத்தி செல்லப்படுகின்றன.

இன்று மீள்குடியேறிய மக்கள், தமது வீடுகளை அமைப்பதற்கு சிறிய தடிகளை வெட்டினால் கைது செய்யும் பொலிஸார், பாரிய மரக்கடத்தலை தடுப்பதற்கு நாதியற்று நிற்பதாக எண்ணத் தோன்றுகின்றது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்திலும் பல கிராம சேவகர் பிரிவுகளில் மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டு வருவதாக பொது மக்கள் எம்மிடம் முறையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஓமந்தை சேதனைச்சாவடியூடாக, மரங்களுடன் சென்ற வாகனங்களின் விவரத்தை தருமாறு கோரியிருந்தோம். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த நிறைவு காலத்தின் பின்னரே வடக்கு பிரதேசத்தில் காடழிப்பு மிக மோசமாக இடம்பெற்று வருகின்றது. எனவே, ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து மரக்கட்டத்தலில் ஈடுபடும் விசமிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், வெறும் சுற்றுச்சுழல் தொடர்பில் குறிப்பிடப்பட்ட நாளில் மாத்திரம் நினைவு கூர்வதால் எவ்வித பலனும் கிடைத்து விடப்போவதில்லை என்பதனையும் தெரியப்படுத்த விரும்புகின்றேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X